Published : 08 Aug 2014 10:00 AM
Last Updated : 08 Aug 2014 10:00 AM
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயரும் என்று ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சாந்தா கொச்சார் தெரிவித்தார்.
இந்திய தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கி-யின் பெண்கள் பிரிவு ஏற்பாடு வியாழக்கிழமை கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்ற கொச்சார், பெண்கள் நம்பிக்கையுடன் அறிவார்ந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். நேர நிர்வாகத்தோடு கடின உழைப்பு இருந்தால் வெற்றியை நிச்சயம் ஈட்டலாம் என்று சுட்டிக் காட்டினார்.
நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண்களின் எண்ணிக்கை இன்னமும் உரிய அளவுக்கு அதிகரிக்கவில்லை; இத்தகைய கூட்டங்களில் பெண்கள் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
பணியிடங்களில் பாலின பாகுபாடு கூடாது. அவ்விதம் பாகுபாடில்லாமல் இருக்கும்போது பெண்களின் கருத்துகளுக்கு இடமிருக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான சூழல் உருவாகும். புதிய கருத்துகள் தோன்றி அது வளர்ச்சிக்கு வழியேற்படுத்தும் என்றார். பெண்களுக்கென்று சிறப்புச் சலுகை ஏதும் தர வேண்டிய அவசியமில்லை, ஆண்களுக்கு சமமாக பெண்களை நடத்தினாலே போதுமானது. அதேசமயம் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றார் கொச்சார்.
பெண்களிடையே பொதிந்துள்ள பன்முக பணிகளைக் கையாளும் திறன் அவர்களை மிகச் சிறந்த தலைமைப் பதவிக்குக் கொண்டு செல்லும் என்று குறிப்பிட்டார். பெண்கள் தங்களிடையே பொதிந்துள்ள தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது அவசியம் என்று சுட்டிக் காட்டினார்.
இலக்கை எட்டுவது சாத்தியம்:
நடப்பு நிதி ஆண்டில் 5.5 சதவீத வளர்ச்சியை எட்டுவது சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார். வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் நிதி நிர்வாகம் கடுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே இலக்கை எட்ட முடியும் என்றும் சுட்டிக் காட்டினார்.
சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதோடு பொருள் விநியோகம் தடைபடாமல் அரசு பார்த்துக் கொள்வதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி இலக்கை எட்ட முடியும் என்றார் கொச்சார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT