

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.9) பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம், செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது.
எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அமெரிக்கா வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதுவும் தங்கம் விலை உயர ஒரு காரணம்.
இதன்பிறகு, ஓரிரு நாட்கள் இறக்கமாகவும், பெரும்பாலான நாட்கள் ஏற்றமாகவும் இருந்து வந்த நிலையில், அக்.6 பவுன் தங்கம் ரூ.89 ஆயிரத்தை தொட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆபரணத் தங்கத்தின் விலை அக்.7 பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.8) ஒரே நாளில் காலையில் பவுனுக்கு ரூ.800-ம், மாலையில் ரூ.680-ம் உயர்ந்த வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து, பவுன் ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக்.9) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,400-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் 171 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,71,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.