

புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் 2025-26-ம் நிதியாண்டுக்கு வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யும் பணிகளில் வரி செலுத்துவோர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இதுவரை 6 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளாதக வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவகாசம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் செப். 15 காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. வருமான வரி துறை தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளதாவது: தற்போது வரை 6 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடைசி நேர நெருக்கடிகளை தவிர்க்க முன்கூட்டியே வரி தாக்கல் செய்வதன் முக்கியத்துவத்தை விளக்கும் வீடியோக்களை வருமான வரி துறை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வருமான வரி துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, போர்ட்டல் செயல்பாட்டில் மந்தம், படிவங்களை பதிவிறக்குவதில் சிக்கல், வடகிழக்கு மாநிலங்களி்ல் பெய்த கனமழை ஆகியவற்றால் செப். 15-க்குள் வரி தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 வரை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய வரிவிதிப்பு அட்வகேட்ஸ் அசோசியேசன் வலியுறுத்தி உள்ளது.