Published : 29 Jul 2018 11:02 PM
Last Updated : 29 Jul 2018 11:02 PM

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் உரிமைகோராத தொகை ரூ.15,167 கோடி: ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏ தகவல்

இந்தியாவில் உள்ள 23 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வசம் உரிமைகோரப்படாத தொகை ரூ.15,167 கோடி இருப்பதாக காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) தெரிவித்திருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாலிசிதாரர்களை சந்தித்து, அவர்களுக்கான தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் ஐஆர்டிஏ தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திலும் உள்ள பாலிசிதாரர் பாதுகாப்பு குழு, சம்பந்தப்பட்டவர்களுக்கான தொகை சரியான நேரத்தில் சென்றடைகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். மேலும் உரிமை கோரப்படாத தொகை உயராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவையின் ஒரு பகுதியாக க்ளைம்களை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ அறிவுறுத்தி இருக்கிறது.

கடந்த மார்ச் 31 நிலவரப்படி 23 காப்பீட்டு நிறுவனங்களில் உரிமை கோரப்படாத தொகை ரூ.15,167 கோடியாக இருக்கிறது. இதில் எல்ஐசி வசம் மட்டும் ரூ.10,509 கோடி உள்ளது. மீதமுள்ள 22 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ரூ.4,657.45 கோடி உரிமை கோரப்படாமல் இருக்கிறது.

தனியார் காப்பீட்டு நிறுவனங்களை பொறுத்தவரை ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிறுவனத்தில் ரூ.807 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.

இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் நிப்பான் (ரூ.692 கோடி), எஸ்பிஐ லைப் (ரூ.678 கோடி), ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்ட் லைப் நிறுவனத்தில் ரூ.659 கோடி உரிமைகோரப்படாமல் இருக்கிறது.

உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இணையதளத்தில் தேடும் வாய்ப்பினை நிறுவனங்கள் வழங்கவேண்டும். பாலிசிதாரரோ அல்லது அவரை சார்ந்தவர்களோ தேடுவதற்கு வசதி ஏற்படுத்த  வேண்டும். பாலிசிதாரர் அல்லது அவரை சார்ந்தவர்கள் பாலிசி எண், பிறந்த தேதி, பான் எண் உள்ளிட்ட தகவலை உள்ளிடுவதற்குவசதி ஏற்படுத்த வேண்டும். அரையாண்டு அடிப்படையில் உரிமைகோரப்படாத தகவலை தங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என ஐஆர்டிஏ கூறியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x