Published : 24 May 2025 06:46 AM
Last Updated : 24 May 2025 06:46 AM
புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று டெல்லியில் நடைபெற்ற "ரைசிங் நார்த் ஈஸ்ட்" முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி கூறியுள்ளதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி கதையில் ஒரு புதிய அத்தியாயம் வடகிழக்கின் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் விரிவடைந்து வருகிறது. பன்முகத்தன்மை, மீள்தன்மை மற்றும் பயன்படுத்தப்படாத ஆற்றல் இப்பகுதிகளில் வேரூன்றி உள்ளது. இந்த பகுதிகள் நமது கலாச்சார பெருமை, பொருளாதார வாக்குறுதி மற்றும் உத்திசார் திட்டங்களின் மூல ஆதாரமாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அடுத்த 10 ஆண்டுகளில் அதானி குழுமம் வடகிழக்கு முழுவதும் ரூ.50,000 கோடி முதலீட்டை கூடுதலாக மேற்கொள்ள உள்ளது.
பசுமை எரிசக்தி, சாலைகள், நெடுஞ்சாலைகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்த கூடுதல் முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. எங்களது ஒவ்வொரு முயற்சியும் உள்ளூர் வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, சமூக ஈடுபாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்கும். இவ்வாறு அதானி தெரிவித்தார்.
அதானி குழுமம் கடந்த பிப்ரவரி மாதத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், கூடுதலாக ரூ.50,000 கோடி முதலீட்டை முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் அந்த குழுமம் நேற்று அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT