Published : 09 May 2025 01:42 AM
Last Updated : 09 May 2025 01:42 AM
புதுடெல்லி: இந்தியா மீது வியாழக்கிழமை அன்று இரவு பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. அதை இந்திய ராணுவம் இடைமறித்து அழித்தது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பூந்தர், கிஷன்கர், சிம்லா, கங்கரா, பட்டிண்டா, ஜெய்சல்மார், ஜோத்பூர், பிகானேர், ஹல்வாரா, பதன்கோட், ஜம்மு, லே, முன்ட்றா, ஜாம்நகர், ஹிராசர் (ராஜ்கோட்), போர்பந்தர், கேஷோத், கண்ட்லா, புஜ் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன. மே 10-ம் தேதி வரை இந்த விமான நிலையில் மூடப்பட்டு இருக்கும் என தகவல்.
பாதுகாப்பு மேம்பாடு: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தப்பட்ட காரணத்தால் பயணிகள், தங்களது புறப்பாட்டுக்கு குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்னதாக விமான நிலையத்துக்கு வருமாறு பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் சமூக வலைதளத்தில் அறிவுறுத்தி உள்ளன.
எல்லை பகுதிகளில் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர இந்திய பகுதிகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் முயற்சியை முன்னெடுத்தது. உதம்பூர், சத்வாரி, சம்பா, ஆர்எஸ்.புரா, உரி, ரஜோரி மற்றும் ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் தரப்பு குறிவைத்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஏவிய 8 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இந்திய ராணுவம் இடைமறித்து வீழ்த்தியது. இதன் காரணமாக ஜம்முவில் பலத்த சப்தம் ஏற்பட்டது.
மேலும், ஜம்மு காஷ்மீரின் சில மாவட்டங்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சைரன் ஒலி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்நிலையில், நள்ளிரவுக்கு பிறகு இந்திய பாதுகாப்பு படை பாகிஸ்தானின் நகரங்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக தகவல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT