Published : 28 Apr 2025 08:19 AM
Last Updated : 28 Apr 2025 08:19 AM

இந்தியாவின் வர்த்தக தடையால் பாகிஸ்தானில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு

புதுடெல்லி: இந்தியா உடனான வர்த்தக உறவு முறிந்ததால் பாகிஸ்தானில் மருந்து, மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் மருத்துவ துறையில் அவரச நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவு முழுமையாக முறிந்திருக்கிறது.

பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதோடு உயிர் காக்கும் முக்கிய மருந்துகள் இந்தியாவில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதை கண்டித்து, இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாக அறிவித்தது. ஆனால் அப்போது இந்திய மருந்துகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

தற்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியால் இந்தியாவில் இருந்து மருந்து உற்பத்திக்கான மூலப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பாகிஸ்தானில் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் மருத்துவ துறையில் அவசர நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது. சீனா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் மருந்து உற்பத்தித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் சுமார் 50 சதவீதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதோடு பாம்பு கடிக்கான தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பூசி, புற்றுநோய் தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள் இந்தியாவில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவில் இருந்து இந்த மருந்துகளை வாங்க முடியும். ஆனால் இந்திய மருந்துகளை ஒப்பிடும்போது இதர நாடுகளின் மருந்துகள் 10 மடங்கு விலை அதிகம். அதோடு போக்குவரத்து செலவும் கணிசமாக அதிகரிக்கும்.

பாகிஸ்தானின் மருந்து உற்பத்தி, விநியோக நிறுவனங்கள், முழுமையாக இந்தியாவை நம்பியிருக்கிறது. தற்போது இரு நாடுகள் இடையே பதற்றம் எழுந்து வர்த்தக உறவு முறிந்திருக்கிறது. இதனால் பாகிஸ்தான் முழுவதும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவுடன் மோதல் ஏற்படும்போதெல்லாம் பாகிஸ்தானில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். அந்த காலங்களில் பாகிஸ்தான் மருத்துவனைகளில் போதிய மருந்துகள் இல்லாமல் பலர் உயிரிழந்து உள்ளனர். தற்போதும் இதுபோன்ற சூழல் எழுந்திருக்கிறது. தற்காலிகமாக சீனா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து மருந்துகளை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனினும் அடுத்த சில மாதங்கள் மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

பாகிஸ்தானில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் குறைவு. உயர் சிகிச்சைக்காக பாகிஸ்தானியர்கள் அண்டை நாடான இந்தியாவுக்கு செல்வது வழக்கம். தற்போது பாகிஸ்தானியருக்கான அனைத்து விசாக்களையும் இந்திய அரசு ரத்து செய்திருக்கிறது. இதுவும் பாகிஸ்தான் மக்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது. இவ்வாறு பாகிஸ்தான் மருந்து உற்பத்தித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x