இலவச, மானிய மின்சாரத்துக்கு ரூ.16,274 கோடி வழங்க தமிழக அரசுக்கு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு

இலவச, மானிய மின்சாரத்துக்கு ரூ.16,274 கோடி வழங்க தமிழக அரசுக்கு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.16,274 கோடி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. குடிசை வீடுகள், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரமும், விசைத்தறி உள்ளிட்ட பிரிவுகளுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின் வாரியத்துக்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ஆண்டுதோறும் எவ்வளவு மானியத் தொகை வழங்க வேண்டும் என்பதை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்து அரசுக்கு உத்தரவிடுகிறது. அதற்கு ஏற்ப அந்தத் தொகை மின்வாரியத்துக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் வழங்கப்படுகிறது.

அதன்படி, வரும் 2025-26-ம் ஆண்டுக்கு ரூ.16,274 கோடி வழங்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில், வீடுகளுக்கான மானியம் ரூ.7,752 கோடி, விவசாயத்துக்கு ரூ.7,047 கோடி, குடிசை வீடுகளுக்கு ரூ.360 கோடி, வழிபாட்டு தலங்களுக்கு ரூ.20 கோடி, விசைத்தறிக்கு ரூ.560 கோடி, கைத்தறிகளுக்கு ரூ.15 கோடி, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு ரூ.398 கோடி, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது மின்இணைப்புகளுக்கு ரூ.49 கோடி அடங்கும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in