

கோவை: ‘ஸ்டீல்’ மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு 12 சதவீத வரி விதிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்த நிலையில், அமலுக்கு வரும் முன்பே விலை உயர தொடங்கியுள்ளது என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி தொழில்துறையில் பல்வேறு பொருட்கள் தயாரிப்புக்கு ‘ஸ்டீல்’ முக்கிய மூலப்பொருளாகும். கரோனா நோய்தொற்று பரவலை தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. கோவை உள்ளிட்ட நாடு முழுவதும் தொழில்துறையினர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதால் விலை சீராக இருந்தது. இந்த ஆண்டு ஸ்டீல் இறக்குமதிக்கு 12 சதவீத வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நடைமுறைபடுத்தப்படும் முன்பே பொருட்களின் விலை உயர தொடங்கியுள்ளதாகவும் இதனால் கடும் நெருக்கடி ஏற்பட தொடங்கியுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கத்தின்(டான்சியா) துணை தலைவர் சுருளிவேல் மற்றும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின்(கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ‘ஸ்டீல்’ மூலப்பொருளுக்கு இந்தாண்டு 12 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை. இருந்த போதும் தற்போதே பொருட்கள் பதுக்கப்பட்டு விலை உயர்த்தப்படுகிறது. ஏற்கெனவே குறு, சிறு தொழில் நிறுவனங்கள் போதிய பணி ஆணைகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இத்தகைய சூழலில் ஸ்டீல் விலை உயர்ந்தால் கடும் நெருக்கடி ஏற்படும்.
இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்பட வேண்டும். தொழில்துறை நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.