நாகை - இலங்கை இடையே மீண்டும் தொடங்கியது பயணிகள் கப்பல் போக்குவரத்து!

நாகை இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது
நாகை இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது
Updated on
1 min read

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டின் நாகை - இலங்கையின் காங்கேசன் துறை இடையே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது. வாரம் 5 நாட்கள் இரு மார்க்கமும் சென்று வந்த கப்பல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பாதுகாப்பு கருதி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது வடகிழக்கு பருவமழை விலகிய நிலையில் இம்மாதம் 12-ம் தேதி முதல் கப்பல் சேவை தொடங்கும் என கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் குறிப்பிட்ட தேதியில் கப்பலை இயக்க முடியவில்லை. பின்னர் அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று காலை சிவகங்கை கப்பல் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது.

இன்று காலை ஏழு முப்பது மணிக்கு புறப்பட்ட கப்பலில் 83 பயணிகள் இலங்கைக்கு பயணித்தனர். மும்மதங்களைச் சேர்ந்தவர்கள் கொடியசைத்து கப்பலின் பயணத்தை தொடங்கி வைத்தனர். இக்கப்பல் இனி செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் மற்ற 6 நாட்களும் இயக்கப்பட உள்ளது. இக்கப்பலில் பயணிக்க இரு மார்க்கத்திற்கும் சேர்த்து கட்டணம் 8500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பையில் 10 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படும். முன்பதிவு, டிக்கெட் கட்டணம், லக்கேஜ் கட்டணம் உள்ளிட்ட இதர விபரங்கள் அவர்களது http://www.sailsubham.com/ என்ற இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in