Published : 12 Jul 2018 08:21 AM
Last Updated : 12 Jul 2018 08:21 AM
வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்திருக்கிறார். இந்த துறையின் மிகப்பெரிய இணைப்பு இதுவாகும்.
இரு நிறுவனங்கள் இணைவதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டோம். இருந்தாலும் இன்னும் சில விஷயங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இணைப்புக்கு முன்பு இவை சரி செய்யப்படும் என அமைச்சர் கூறினார். புதுடெல்லியில் நடந்த பிஎஸ்என்எல் நிகழ்ச்சியில் அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த இணைப்பு தொடர்பாக அரசு தரப்பில் இருந்து முறையாக அறிவிக்கப்படும் முதல் தகவல் இதுதான்.
வோடபோன் நிறுவனத்தின் உயரதிகாரிகள் கடந்த செவ்வாய்கிழமை தம்மை சந்தித்ததாகவும், இணைப்புக்கான ஒப்புதலை விரைவாக வழங்கியதற்கு வோடபோன் நிறுவனத்தினர் நன்றி தெரிவித்தாக அமைச்சர் கூறினார்.
இணைப்புக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதை வோடபோன் நிறுவனத்தின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் நிக் ரீடும் உறுதி செய்தார். ஒப்புதல் கடிதம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும் என தெரிவித்தார். ஆனால் வங்கி உத்தரவாத தொகை குறித்து வோடபோன் அதிகாரிகள் கருத்து கூற மறுத்துவிட்டனர்.
வோடபோன் நிறுவனம் ஒருமுறை ஸ்பெக்ட்ரம் கட்டணமாக ரூ. 3,976 கோடி செலுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவினை எதிர்த்து வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
வோடபோன் நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி விட்டோரியோ கோலோவ் கூறும்போது, வரும் அக்டோபர் மாதம் வரை இந்த பொறுப்பில் இருப்பேன். அதற்குள் புதிய நிறுவனமான வோடபோன் ஐடியா உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்தியா எங்களுக்கு முக்கியமான சந்தை, இங்கு தொடர்ந்து முதலீடு செய்வோம் என்றும் கூறினார்.
இந்த இரு நிறுவனங்களும் இணையும் பட்சத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உயரும். புதிய நிறுவனத்தின் மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடியாகவும், 35 சதவீத சந்தை மற்றும் 43 கோடி வாடிக்கையாளர்களும் இருப்பார்கள். புதிய நிறுவனத்தில் வோடபோன் 45.1 சதவீத பங்குகளையும், ஐடியா நிறுவனத்துக்கு 26 சதவீத பங்குகளும் இருக்கும். மீதமுள்ள பங்குகள் சிறுமுதலீட்டாளர்கள் வசம் இருக்கும்.
புதிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பலேஷ் சர்மா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஐடியா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அக்ஷயா முந்திரா, புதிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தொடருவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT