

நாமக்கல்: கிஸான் கடன் அட்டை உச்சவரம்பு ரூ.3 லட்சத்தி லிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்க மாநில தலைவர் ஆர்.வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான கிஸான் கடன் அட்டை உச்சவரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளதால் எந்த பலனும் இல்லை.
விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு கட்டுப்படியான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் எனும் எம்எஸ்பியை அமல்படுத்தவில்லை. மாறாக கிஸான் கடன் அட்டை மூலம் கடன் உச்சவரம்பை அதிகபடுத்துவதன் மூலம் விவசாயிகள் மேலும் கடன் சுமைக்கு ஆளாவார்கள்.
மத்திய அரசு உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை படிப்படியாக குறைத்ததால் நாட்டில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி அதலபாதாளத்துக்கு சென்று விட்டது.
அதனால், இந்திய உள்நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பணவீக்க விகிதம் தொடந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உள்நாட்டில் உற்பத்தியைப் பெருக்க தொலைநோக்கு திட்டம் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.