விழுப்புரம் மினி டைடல் பார்க்கில் 30% இடங்களில் மட்டுமே இயங்கும் ஐடி நிறுவனங்கள்!

விழுப்புரம் மினி டைடல் பார்க்கில் 30% இடங்களில் மட்டுமே இயங்கும் ஐடி நிறுவனங்கள்!
Updated on
1 min read

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகே மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் டைடல் பார்க் அமைக்க கடந்த ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்பு வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகில் மினி டைடல் பார்க் (NEO TIDEL PARK) கட்டப்பட்டு, கடந்த 17-02-2024-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அலுவலகங்கள் அமைக்க கட்டப்பட்டுள்ள 63,000 சதுர அடியுள்ள இடத்தில் 30 சதவீதமான இடங்களில் மட்டுமே இதுவரை நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளன. திறப்பு விழா கண்டு 10 மாதங்களுக்கு மேலாகியும் 70 சதவீதமான இடத்தில் எவ்வித நிறுவனமும் தொழில் தொடங்கவில்லை.

சுமார் 1,000 பேருக்கு மேல் நேரடி வேலைவாய்ப்பும், பல நூறு பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையான செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என விழுப்புரத்தைச் சேர்ந்த கார்க்கி என்கிற இளைஞரிடம் கேட்டபோது, “சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள் அளித்து, தங்களது கிளை அலுவலகங்களை வானூர் டைடல் பார்க்கில் தொடங்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.

வானூர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த புத்தாக்க (Startup) நிறுவனங்களுக்கு மானிய விலையில் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு வாடகை இல்லாமல் இடவசதி அளித்து தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட தலைநகரமான விழுப்புரத்தில் இருந்து வானூர் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு நேரடியாக தினசரி பல்வேறு நேரங்களில் சென்று வருவதற்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

மேலும் செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (IIT- Madras) உள்ளது போல புத்தாக்க வளர் மையங்கள் (Incubation Center) ஒன்றை இங்குஅமைக்க வேண்டும்.

இவற்றை விரைந்துநிறைவேற்றித் தருவதன் மூலம் மாவட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்பு கிடைக்கும். அதனால் தகவல் தொழில்நுட்ப பூங்காவின் முழு வசதிகளும் பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் வேலைவாய்ப்புக்கான குடிபெயர்தல் பெருமளவு குறையும். மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி உயரும்” என்று குறிப்பிட்டார்.திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அமைந்துள்ள மினி டைடல் பார்க்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in