Published : 08 Jun 2018 08:47 AM
Last Updated : 08 Jun 2018 08:47 AM
வெ
ற்றியை வரையறுக்க முடியாது, வடிவமைக்க முடியாது. வெற்றியை செயல்கள் மூலமும், எண்ணங்கள் மூலமும் தான் வெளிப்படுத்த முடியும். அவ்வாறு வெற்றியை வெளிப்படுத்த சில கொள்கைகள் முக்கியம். ஜாக் கேன்பீல்ட் (Jack Canfield) என்னும் நூலாசிரியர் வெற்றிக்கான கொள்கைகளையும் காரணிகளையும் வரையறுத்து வகைப்படுத்தி விரிவாக எடுத்துக் கூறுகிறார். கீழ் வரும் மூன்று முக்கிய கருத்துகளை இந்த நூலின் மொத்த வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளலாம்.
வெற்றியடைய நூறு சதவீதம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். பொறுப்பு துறப்பு வெற்றி துறப்பு என்றால் வித்தியாசம் ஆகாது. வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு ஊன்றி செயல்படும் பொழுது வெற்றி வசப்படும்.
சொல்வதை செய்ய வேண்டும். செய்யாதவைகளை சொல்லக்கூடாது. எண்ணம், செயல் அனைத்தும் உள் நோக்கங்களின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். நோக்கம் ஒன்று செயல் ஒன்று என்ற நிலையில் வெற்றி கண்ணில் இருந்து மறைந்து விடும். உயரிய தேவைகள் வாழ்வின் வழிமுறைகள் ஆகியவை இலக்குகளில் வெளிப்படும் பொழுது பேராசையும், பொறாமையும், அல்லாத செயல்களும் விடுபட்டுப் போகும் அந்த நேரத்தில் வெற்றி வசப்படும்.
எண்ணிய முடிதல் வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் குறை சொல்லாமல் இருப்பது ஆகும். செயல்களில் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றின் வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சித்தரிக்கும் பொழுது இலக்கில் இருந்து வெற்றி மறைந்து விடுகிறது. சொல்வதைத் திருந்தச் சொல்லும் பொழுது குறைகளைக் களைந்து செயல்களுக்கு வடிவம் கொடுக்கும் பொழுது வெற்றியை நோக்கி வேகமாக நகரலாம்.
இந்த மூன்று முக்கிய கருத்துகள்தான் புத்தகத்தில் வெகுவாக விவரித்து மேற்கோள்களோடும், உதாரணங்களோடும் எளிய முறையில் புரிந்துக் கொள்ள உதவும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. எண்ணங்கள் செழுமை பெற மிகப் பெரிய எண்ண ஓட்டங்களாக கீழ்வரும் ஐந்து கொள்கைகளை நூல் ஆசிரியர் கூறுகிறார்.
1.நடத்தை, 2. ஈர்ப்புத் திறன், 3 திறமையே எல்லை, 4. வெற்றிக்கான உத்தி, 5 செய்வன திருந்தச் செய்தல்.
நடத்தை
ஒவ்வொருவருக்கும் வாழ்வில் கட்டுப்பாடுகள் மூன்று வடிவில் இருக்கும். எண்ணங்கள், கற்பனையில் வரையும் ஓவியங்கள், செயல்படும் திறன் என்ற மூன்றும் வெற்றிக்கான நடத்தைகளை வடிவமைக்கின்றது. எண்ணங்களில் மேம்பட்ட போக்கு இருந்தால் விழுவதற்கு வாய்ப்புகள் குறைவு. கற்பனையில் வரையும் ஓவியங்கள் செயல்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றன. ஊக்கம் பெற்ற செயல்கள் நடத்தையைத் தீர்மானிக்கின்றன. ஆக எண்ணம் கற்பனையை தூண்டுகிறது. கற்பனைக் கலன்கள் நடத்தையை வடிவமைக்கின்றது. வெற்றிக்கு சரியான நடத்தை இதன் மூலம் பெற முடிகிறது. ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதன் காரணமாக மூன்றும் ஒரு நேர் கோட்டில் அமையும் பொழுது வெற்றி எட்டும் கனியாகிறது.
ஈர்ப்புத் திறன்
ஈர்ப்புத் திறன் விதி ஒவ்வொருவரையும் வழிநடத்துகிறது. நேர்மறை எண்ணங்களும், பண்பாடான பேச்சும் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவ்வாறு தன்னம்பிக்கையை வளர்க்கும் பொழுது மற்றவர்களில் இருந்து நாம் வேறுபடுகிறோம். இந்த வேறுபாடு நம் எண்ண ஓட்டங்களையும் தன்னம்பிக்கைகளையும் செயல்களை நோக்கி ஈர்க்கும். மாற்றங்கள் வருவதற்கு இது போன்ற வேறுபட்ட நேர்மறை எண்ணங்களும் தன்னம்பிக்கைகளும் ஆதாரக் காரணங்களாகும். நாம் கொண்டு வரக் கூடிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு மற்றும் வெற்றியை அடைவதற்கு நம்முடைய அழுத்தமான எண்ணக்குவியல்கள் செயல்களை நோக்கி ஈர்ப்பதைச் செயல்படுத்துதல் அவசியம்.
திறமையே எல்லை
பொருட்களையும், சொத்துகளையும், மனிதர்களையும் சில நேரங்களில் பெறலாம், பல நேரங்களில் இழக்கலாம். ஆனால் திறமை நாம் நினைத்தால் மட்டுமே நேர்மறையாக இருக்கும். எதிர்மறையாக போவதற்கும் திறமைகளை இழப்பதற்கும் நாம் மட்டுமே காரணம். அவ்வாறு திறமைகளைக் கட்டமைக்கும் பொழுது நான் எதுவாக மாற வேண்டும் என்ற தெளிவான குறிக்கோளும், எந்த வகையில் செயல்படுகிறேன் என்பதும் திறமைக்கு அடிப்படைக் காரணிகள். திறமை ஆதிக்கம் செலுத்தும் போதுதான் வெற்றி வசப்படும். திறமையின் ஆதிக்கம் குறையும் பொழுது தன்னம்பிக்கை கை விட்டுவிடும். நாம் எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த இலக்கு மறைந்து விடும். எனவே கூரிய, சீரிய திறமைகளை வளர்த்துக் கொள்வது வெற்றிக்கு வழிகாட்டும். எல்லாக் காரணிகளும் சமநிலையில் இருக்கும் பொழுது திறமையின் ஆதிக்கம் வெற்றியை நோக்கி வெகுவிரைவாகச் செல்லும். திறமையின் ஆதிக்கம் என்ற காற்று இலக்கை நோக்கி பயணிக்கும் போது பாய் மரத்தை வெகு வேகமாகச் செலுத்தும். திறமையின் ஆதிக்கம் என்ற காற்று இல்லாத போது பாய்மரத்தால் எந்த பயனும் இல்லை. எனவே அதுபோன்ற நேரங்களில் பாய்மரம் இலக்கை அடைய உதவாது.
வெற்றிக்கான உத்தி
வெற்றி வசப்பட வெற்றியடைந்ததைப் போல உணர வேண்டும். அந்த உணர்வு திறமையின் ஆதிக்கத்தில் மேம்படும். பணிவான, தன்னடக்கமான, ஆர்ப்பாட்டம் இல்லாத செயல்கள் மட்டுமே பெருமை சேர்க்கும் என்ற தவறான கருத்துக்கள் வெற்றியைத் தட்டிவிடும். நாயகன் வேடமிடுவோர் நகைச்சுவை பாணியில் பேசும் பொழுது திறமையின் ஆதிக்கம் குறைந்து போவதால் அவரால் சரிவர செயல்பட இயலாது. எனவே தலைமைக்கு தேவை திறமையின் ஆதிக்கம். அந்த திறமையின் ஆதிக்கம் சரியான உத்திகள் மூலம்தான் செயல்பாட்டிற்கு வந்து சேரும். உத்திகளை வடிவமைக்க மேம்பட்ட திறனும், ஆதிக்கமும் அவசியம். வெற்றிக்கான உத்திகள் கடைகளில் கிடைப்பதில்லை. நடத்தைகளும், ஈர்ப்புத் திறனும், திறமையின் எல்லைகளும் உத்திகளாக வடிவமைக்கப்படுகின்றன. அந்த உத்திகள் வெற்றிக்கு வழிவகுக்கும்.
செய்வன திருந்தச் செய்தல்
நம்முடைய செயல்கள் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும் என்றால் அந்தச் செயல்கள் மற்றவர்கள் கூறுவது போல், அல்லது மற்றவர்களைத் திருப்திப் படுத்துவது போல் இருக்கக் கூடாது. செயல்களைத் திருந்தச் செய்யும் பொழுது நம்மை நாமே திருப்தி படுத்திக் கொள்கின்றோம். பாதியில் விட்ட செயல்கள் தோல்வியை மட்டுமே பரிசளிக்கும். சில நேரங்களில் நமக்கு தெரிந்த எண்ணங்கள் மட்டுமே வெற்றிக்கு வழிக்காட்டாது மாறாக, நாம் செய்யும் செயல்களே வெற்றிக்கு வழிகாட்டும். எண்ணங்கள் ஆழ்மனதில் ஆடிக் கொண்டு இருக்கும், செயல்கள் நிகழ்காலத்தில் மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்தி வெற்றிக்கு அதிபதி ஆக்குகிறது.
எனவே சீரிய முறையில் செயல்களை செய்தால் வெற்றி நிச்சயம். அவ்வாறு வெற்றியடைவற்கு மேலே கூறிய ஐந்து காரணிகளும் மிகவும் முக்கியமானது என்று நூல் ஆசிரியர் விரிவாகக் கூறுகிறார். மேலே கூறிய மூன்று கொள்கைகளை விரிவாக ஐந்து எண்ணங்களாக வடிவமைத்து வெற்றிக்குப் படிகள் கட்டியிருக்கிறார்.
rvenkatapathy@rediffmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT