

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,440-க்கும், ஒரு பவுன் ரு.59,520-க்கும் விற்பனையாகிறது. தீபாவளிப் பண்டிகை, முகூர்த்த நாட்கள் ஆகியனவற்றின் காரணமாக தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. ஆனால், இந்த விலை குறைவு நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகித்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மாதம் 25-ம் தேதி பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கு விற்பனையானது. பின்னர், இம்மாதம் 21-ம் தேதி ஒரு பவுன் ரூ.58,400-க்கும், 23-ம் தேதி ஒரு பவுன் ரூ.58,720-க்கும் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது.
இந்நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.30) கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,440-க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் ரு.59,520-க்கும் விற்பனையாகிறது.