Published : 03 Jun 2018 08:45 AM
Last Updated : 03 Jun 2018 08:45 AM

கடனுக்கான வட்டியை நான்கு வங்கிகள் உயர்த்தின

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) கடனுக்கான வட்டியை 0.10 சதவீதம் உயர்த்தியது. இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை வட்டியை உயர்த்தி இருக்கின்றன.

நிதியை திரட்டுவதற்கான செலவு அதிகரித்திருப்பதால், நிகர வட்டி வரம்பு குறையாமல் இருப்பதற்காக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதாக வங்கியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். எம்சிஎல்ஆர் விகிதத்தை கடந்த மார்ச் மாதமும் எஸ்பிஐ உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 28-ம் தேதி பிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து கடனுக்கான வட்டி விகிதத்தையும் எஸ்பிஐ உயர்த்தி இருக்கிறது. புதிய வட்டி விகிதம் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக எஸ்பிஐ அறிவித்திருக்கிறது. ஓர் ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக எஸ்பிஐ உயர்த்தி இருக்கிறது. அதேபோல ஓர் ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 8.30 சதவீதத்தில் இருந்து 8.40 சதவீதமாக பஞ்சாப் நேஷனல் வங்கி உயர்த்தி இருக்கிறது. கோடக் மஹிந்திரா வங்கியும் 0.10 சதவீதம் முதல் 0.20 சதவீதம் வரை வட்டியை உயர்த்தி இருக்கிறது.

பெரும்பாலான கடன்கள் எம்சிஎல்ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் வட்டி விகித உயர்வு காரணமாக கடனுக்கான இஎம்ஐ உயரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆக்ஸிஸ் வங்கி மற்றும் கர்நாடகா வங்கி ஆகியவை டெபாசிட்களுக்கான வட்டியை உயர்த்தி இருக்கின்றன. முக்கிய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பதால் மற்ற வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x