

புதுடெல்லி: எதிர்வரும் 2030-ல் உலக நாடுகளில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என ஆய்வுத் தகவலை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
தலைநகர் டெல்லியில் தனியார் ஊடக நிறுவன நிகழ்வில் பங்கேற்ற அவர், “வரும் 2075-ல் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கி சில காலத்துக்கு முன்பு கணித்தது. அதையே கொஞ்சம் குறைவான காலக்கட்டத்தில் நாம் பார்க்கும்போது வரும் 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தொழில்நுட்பம், ஏஐ மற்றும் செமிகண்டக்டர் போன்றவற்றின் வளர்ச்சியை பார்க்கும்போது இந்தியாவின் திறன் முக்கியத்துவம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவின் மக்கள் தொகை அதிகம். இங்குள்ள திறனும் அதிகம். அந்த வகையில் யார் முன்னேறுகிறார்கள் என்பது இதில் முக்கியம்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-வது பெரிய நாடாக இருந்தது. இப்போது உலக பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. வரும் 2030-ல் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.