

சென்னை: தங்கம், வெள்ளி விலை இன்று (அக்.21) புதிய உச்சம் கண்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ,20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,300-க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ,58,400-க்கும் விற்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.109-க்கு என்று விற்கப்படுகிறது. இவை புதிய உச்சம்.
கடந்த 6 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,640 உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு முடிவதற்குள் ஆபரணத் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.60,000 ஆக உயரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு, பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. பின்னர், மீண்டும் தங்கம் விலை குறைய தொடங்கியது. ஆனால், இந்த விலை குறைவு அதிக நாட்கள் நீடிக்கவில்லை.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார நெருக்கடிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி உள்பட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கக் கொள்முதலை அதிகரித்துள்ளது. பண்டகச் சந்தையிலும் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. பாதுகாப்பான முதலீடு எனக் கருதி பல்வேறு தரப்பினரும் தங்கம் வாங்குவதை அதிகரித்துள்ள சூழலில் உள்நாட்டிலும் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சங்களை அன்றாடம் எட்டி வருகிறது.
தங்கம் மட்டுமல்ல வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீப காலமாக கோல்ட் ப்ளேடட் சில்வர் ஜுவல்லரி என்ற வெள்ளி நகைகளுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ள நிலையில் தற்போது வெள்ளியின் விலையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.