Published : 06 Jun 2018 10:31 AM
Last Updated : 06 Jun 2018 10:31 AM
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு முன்னணி தொழில் நிறுவனங்கள் பிளாஸ்டிக் உபயோகத்தை படிப்படியாகக் குறைத்துக் கொள்ளப் போவ தாக அறிவித்துள்ளன. ரெக்கிட் பென்கிஸர், பெப்சிகோ, நெஸ்லே, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் உலக சுற்றுச் சூழல் தினத்தில் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்பதற்கான உறுதிமொழியை எடுத்துள்ளன.
2025-ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத பொருள் தயாரிப்பாக தங்களது தயாரிப்புகள் இருக்கும் என்று ரெக்கிட் பென்கிஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களது பெட் பாட்டில்கள் முழுவதையும் சேகரித்து அதை பயன்படுத்துவதற்கான வழி முறைகளை அடுத்த சில ஆண்டுகளில் அமல்படுத்தப் போவதாக பெப்சிகோ அறிவித்துளளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு களான லேஸ் மற்றும் குர்க்குரே ஆகியவை பிளாஸ்டிக் பேக் அல்லாத முழுவதும் மக்கும் தன்மை கொண்ட மேலுறைகளால் பேக் செய்யப்படுகின்றன.
சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் தங்களது பொருள்களின் பேக்கிங்கில் மாற்றம் செய்யப் போவதாக நெஸ்லே அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டிலேயே சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத பேக்கேஜிங் முறையை பின்பற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களது அலுவலகத்தில் பிளாஸ்டிக் உபயோகத்தை பெருமளவு குறைத்து வருவதாக ஹூண்டாய் நிறுவன விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். இருங்காட்டுக் கோட்டையில் உள்ள உற்பத்தி ஆலையில் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்து வருவதாகவும், 1,309 விற்பனையகங்களிலும் பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார். உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் பேக்கேஜிங்கிற்கு பிளாஸ்டிக் தவிர்த்து பிற பொருள்களை உபயோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
குறைவான நீர் தேவைப்படும் கார் வாஷிங் தொழில்நுட்பத்தை பின்பற்றப் போவதாக ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. அதேபோல மரம் நடும் திட்டத்தையும் செயல்படுத்தப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT