

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.320அதிகரித்து ரூ.56,800-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருவதால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரு நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. தொடர்ந்து விலை குறைந்தும் வந்தது. இந்நிலையில், படிப்படியாக அதிகரித்து, கடந்த 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
கடந்த 25-ம் தேதி கிராம் ஒன்றுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.7,060-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கும் விற்பனையானது. இதன் மூலம், தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.7,100-க்கும், பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.56,800-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.60,440-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.102-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,02,000 ஆக உள்ளது. தங்கம் விலை மீண்டும் உயர்ந்துவருவது நகை வாங்குவோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.