Published : 15 Jun 2018 04:53 PM
Last Updated : 15 Jun 2018 04:53 PM

ரூ.16,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்கியது டிசிஎஸ்

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்கும் முடிவுக்கு இன்று ஒப்புதல் வழங்கியது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் சந்தையில் இருந்து பங்குகளை திரும்ப பெறுவதன் மூலம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை அதிகரிக்கும். இதனால் பங்குகளின் விலை உயரும். பங்குகளை திரும்ப பெறுவதால் ஒட்டுமொத்த பங்குகளின் எண்ணிக்கை குறைவதால் ஒரு பங்கின் மூலம் கிடைக்கும் ஆதாயம் உயரும். நிறுவனம் லாப கணக்கில் உள்ள கூடுதல் தொகையை டிவிடெண்டாகவும், பங்குகளை திரும்ப பெறுதல் மூலமும் முதலீட்டாளர்களுக்கு கொடுக்கின்றன.

இதனால் சில நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இருந்து பங்குகளை திரும்ப வாங்குகின்றன. டிசிஎஸ் நிறுவனம், கடந்த ஆண்டு ரூ.13,000 கோடி அளவுக்கு டிசிஎஸ் பங்குகளை திரும்ப வாங்கியது. பங்குச்சந்தையில் இருந்து, 5.61 கோடி பங்குகளை டிசிஎஸ் திரும்ப வாங்கியது.

இந்நிலையில், டிசிஎஸ் இயக்குநர் குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்குகளை திரும்ப வாங்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, 7 கோடியே 61 லட்சத்து, 90 ஆயிரத்து 476 பங்குகளை வாங்க கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. ஒரு பங்கின் விலை ரூ. 2,100 ஆகும். இதன் மொத்த மதிப்பு சுமார் 16,000 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளில், இதன் மதிப்பு 1.99 சதவீதமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x