Published : 13 Jun 2018 09:29 AM
Last Updated : 13 Jun 2018 09:29 AM
பொதுத்துறை வங்கிகளை கண்காணிக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் தேவை என உர்ஜித் படேல் கருத்து தெரிவித்திருக்கிறார். பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், நஷ்டம், மோசடி உள்ளிட்ட பல விஷயங்களில் நாடாளுமன்ற நிலைக் குழுவின் கேள்விகளுக்கு உர்ஜித் படேல் பதில் அளித்தார்.
ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் தேவை என நிலைக்குழுவிடம் உர்ஜித் படேல் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் பொதுத்துறை வங்கிகளை கட்டுப்படுத்த மேலும் அதிகாரம் தேவை என தெரிவித்திருக்கிறார். அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கியில் 200 கோடி டாலர் அளவில் நடைபெற்ற மோசடி குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு வங்கியின் ஒவ்வொரு கிளையிலும் நடப்பவற்றையும் ரிசர்வ் வங்கியால் கண்காணிக்க முடியாது என தெரிவித் திருக்கிறார்.
நிலைக்குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி யும் இருந்திருக்கிறார். அவர் சமீபத்தில் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு மற்றும் வங்கி மோசடி கள் குறித்த கேள்விகளை கேட்டார். இதற்கு வங்கித்துறையை பலப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சினைகளில் இருந்து பொதுத்துறை வங்கிகள் மீண்டுவரும் என்றும், திவால் சட்டத்தை அமல்படுத்திய பிறகு வாராக்கடனை மீட்பதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும் உர்ஜித் படேல் கூறியிருப்பதாக தெரிகிறது.
இந்தியாவில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் 19 வங்கிகள் கடந்த நிதி ஆண்டில் நஷ்டம் அடைந்திருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளின் கடந்த ஆண்டு மொத்த நஷ்டம் ரூ.87,300 கோடியாகும். இந்தியன் வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய இரு வங்கிகள் மட்டுமே கடந்த நிதி ஆண்டில் லாபம் அடைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT