Published : 13 May 2018 10:10 AM
Last Updated : 13 May 2018 10:10 AM

நான்காண்டுகளில் பிளிப்கார்ட் ஐபிஓ வெளியிட வால்மார்ட் திட்டம்

அடுத்த நான்காண்டுகளுக்குள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஐபிஓவை வெளியிட வால்மார்ட் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை ரூ.1.05 லட்சம் கோடிக்கு வால்மார்ட் வாங்கியது. இந்திய இ-காமர்ஸ் துறையில் நடந்த மிகப்பெரிய முதலீடு இதுவாகும்.

அடுத்த நான்காண்டுகளுக்குள் ஐபிஓ வெளியிடப்படும் என அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் வால்மார்ட் கூறியிருக்கிறது. தற்போது வாங்கிய மதிப்பில் இருந்து குறையாது என்றும் வால்மார்ட் கூறியிருக்கிறது.

மேலும் இப்போதைக்கு பிளிப்கார்ட் இயக்குநர் குழுவில் ஐந்து இயக்குநர்களை நியமிக்க முடிவு செய்திருக்கிறது. இதில் இருவர் பிளிப்கார்ட்டில் கணிசமான பங்குகளை வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். சிறுமுதலீட்டாளராக பின்னி பன்சாலும் இயக்குநர் குழுவில் இருப்பார்.

வரும் காலத்தில் இயக்குநர் குழுவின் அனுமதியுடன் ஆறாவது பங்குதாரர் நியமனம் செய்யப்படுவார். அதே சமயத்தில் பின்னி பன்சால் மற்றும் இயக்குநர் குழுவின் அனுமதியுடன், பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, குழும நிறுவனங்களின் உயரதிகாரிகளும் மாற்றப்படுவார்கள் என்று வால்மார்ட் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, ஜப்பானை சேர்ந்த சாப்ட்பேங்க் நிறுவனம் பிளிப்கார்ட்டில் இருந்து முழுமையாக வெளியேறப்போவதில்லை என தெரிகிறது. முன்னதாக 22 சதவீத பங்குகளை விற்று முழுமையாக வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்னும் 7 முதல் 10 நாட்களுக்குள் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சாப்ட்பேங்க் முதலீடு செய்து குறுகிய காலமே ஆகிறது. அதனால் தற்போது வெளியேறும் பட்சத்தில் கூடுதல் வரி செலுத்தியாக வேண்டும்.

ஒருவேளை சாப்ட் பேங்க் பங்குகளை விற்க முடியாது என்னும் பட்சத்தில் வால்மார்ட் வசம் 55 சதவீத பங்குகள் மட்டுமே இருக்கும். மற்ற சிறு முதலீட்டாளர்களான நாஸ்பர்ஸ், ஆக்செல் பார்னர்ஸ் மற்றும் இ-பே ஆகிய நிறுவனங்களும் பிளிப்கார்ட்டில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x