Published : 31 May 2018 08:56 AM
Last Updated : 31 May 2018 08:56 AM
அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க எந்த ஒரு நிறுவனமும் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று சிவில் ஏவியேஷன் செயலர் ஆர்.என். சௌபே தெரிவித்தார். இருப்பினும் டெண்டர் தேதியை மேலும் நீட்டிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.
ஏற்கெனவே விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 14 ஆக இருந்தது. அது மே 31 வரை நீட்டிக்கப்பட்டது.
நஷ்டத்தில் இயங்கும் மற்றும் அதிக கடன் சுமையில் உள்ள ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை அளிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பங்கு விலக்கல் குறித்து அறிவிப்பு வெளியானபோது சில நிறுவனங்கள் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டின. ஆனால் இதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகு எந்த ஒரு நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை. ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் வாங்கப் போவதில்லை என வெளிப்படையாக அறிவித்துவிட்டன.
கடந்த ஏப்ரலில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு தகுதியான நிறுவனம் டாடா குழுமம்தான் என்ற கருத்தும் வெளியானது. ஆனாலும் இதுவரை டாடா குழுமம் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
ஆரம்பத்தில் அரசு வெளியிட்ட நிபந்தனைகளில், பங்கு விலக்கலில் வெற்றி பெறும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துடன் ஏர் இந்தியாவை இணைக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தது. ஊழியர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஆள்குறைப்பு செய்யக் கூடாது என்பதற்காக இந்த நிபந்தனை வெளியிடப்பட்டிருந்தது.
முதல் கட்ட நிபந்தனை தொடர்பாக 160 கேட்புகள் வந்திருந்ததாக சிவில் ஏவியேஷன் அமைச்சகம் முன்னர் தெரிவித்திருந்தது. அரசு வசம் வைத்துள்ள 24 சதவீத பங்குகள் மற்றும் ஏர்லைன் வாங்கியுள்ள கடன் தொகைக்கான பொறுப்புகள், தற்போதைய நிதி நிலை மற்றும் ஊழியர்கள் குறித்து கேட்கப்பட்டதாக தெரிகிறது.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT