Published : 23 May 2018 09:24 AM
Last Updated : 23 May 2018 09:24 AM

வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிராவுக்கு முக்கிய பங்கு

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஏழு மாதங்களில் 39.36 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் பாதிக்கு மேல் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை பிஎப் அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் 6.13 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை அதிகமாகும். பிப்ரவரியில் 5.89 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாகின. அனைத்து விதமான வயதில் இருப்பவர்களுக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது. எலெக்ட்ரிகல், மெக்கானிக்கல் அல்லது இன்ஜினீயரிங் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாயின. இதனைத் தொடர்ந்து கட்டுமானத் துறை, வர்த்தகம் மற்றும் ஜவுளித் துறையில் வேலை வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

18 முதல் 25 வயதுப் பிரிவில் 12 லட்சம் வேலை வாய்ப்புகளும், 22 முதல் 25 வயதுப் பிரிவில் 11 லட்சம் வேலை வாய்ப்புகளும் கடந்த 7 மாதங்களில் உருவாகி யுள்ளன.

இந்தியாவில் முதல் முறையாக பிஎப் எண்ணை அடிப்படையாக வைத்து வேலை வாய்ப்பு தகவலை வெளியிடும் முறை கடந்த மாதம் அறிமுகமானது. ஆனால் இந்த தகவல்கள் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை என இந்த துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் நாட்டின் உண்மையாக வேலை உருவாக்கத்தை வெளிப்படுத்தாது. மாறாக ஒரு வேலையில் இருந்து மற்ற வேலைக்கு மாறுபவர்கள் கூட இந்த பட்டியலில் இடம்பெறலாம். அதனால் இது புதிய வேலை உருவாக்க தகவலாக இருக்க முடியாது என கருதுகின்றனர்.

தவிர இதில் பல பணியாளர்கள் தற்காலிக பணியாளர்களாக கூட இருக்கலாம். அவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை இருக்கும் வாய்ப்பு இல்லை என்ற கருத்தும் இருக்கிறது. தற்போதுவரை 6 கோடிக்கு மேல் பிஎப் சந்தாதாரர்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x