ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகளுக்கு மின்சாரத்தை எடுத்து செல்ல 3,600 மெகாவாட் திறனில் வழித்தடம்

ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகளுக்கு மின்சாரத்தை எடுத்து செல்ல 3,600 மெகாவாட் திறனில் வழித்தடம்
Updated on
1 min read

சென்னை: தூத்துக்குடியில் ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகளுக்கு தேவைப்படும் சூரியசக்தி, காற்றாலை மின்சாரத்தை எடுத்துச் செல்ல 3,600 மெகாவாட் திறனில் மத்திய அரசு வழித்தடம் அமைக்கிறது.

தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகளை உள்ளடக்கிய முனையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பசுமை ஹைட்ரஜன் ஆலைகளுக்காக புதிதாக சூரியசக்தி, காற்றாலை மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்ல மத்திய அரசின் மின்தொடரமைப்பு நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடியில் ஏற்கெனவே உள்ள துணைமின் நிலையத்தில் தலா 1,500 மெகா வோல்ட் ஆம்பியர் திறனில் 3 பவர் டிரான்ஸ்ஃபார்மர்கள் நிறுவப்பட உள்ளன. இதன்மூலம், 3,600 மெகாவாட் மின்சாரத்தைக் கையாள முடியும். தூத்துக்குடியில் உற்பத்தியாகும் மின்சாரம் தர்மபுரி வழியாக கர்நாடக மாநிலம் மதுகுரியில் உள்ள 765 கிலோ வோல்ட் துணைமின் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இதற்காக, தூத்துக்குடி, தர்மபுரி, மதுகுரி இடையே உள்ள மின்வழித் தடங்களின் திறன் அதிகரிக்கப்பட உள்ளன. இதன் மொத்த திட்ட செலவு ரூ.2,617 கோடியாகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in