உலகிலேயே இந்தியாவில்தான் மொபைல் கட்டணம் குறைவு: மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தகவல்

ஜோதிர் ஆதித்ய சிந்தியா
ஜோதிர் ஆதித்ய சிந்தியா
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று மக்களவையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் தற்போது 117 கோடி மொபைல் இணைப்பு கள் மற்றும் 93 கோடி இணையஇணைப்புகள் உள்ளன. முன்பு ஒவ்வொரு நிமிடத்துக்கும் அழைப்புக்கான கட்டணம் 53 பைசாவாகஇருந்தது. அது தற்போது வெறும்3 பைசாவாக குறைந்துள்ளது. ஆக, அழைப்பு கட்டண விகிதம்93 சதவீதம் வரை குறைந்துள்ளது. இது உலகின் மிக குறைந்த கட்டண விகிதமாகும். அதேபோன்று ஒரு ஜிபி டேட்டாவின் விலை ரூ.9.12-ஆக உள்ளது. இதுவும் உலகிலேயே மிகவும் மலிவானதாகும்.

மார்ச் 2024 நிலவரப்படி இந்தியாவில் மொத்தமுள்ள 95.04 கோடி இணைய சந்தாதாரர்களில் 39.83 கோடி பேர்கிராமப் பகுதிகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். அதேபோன்று ஏப்ரல் 2024 நிலவரப்படி இந்திய பதிவாளர் ஜெனரல் தரவுகளின் அடிப்படையில் நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில் 6,12,952 கிராமங்கள் 3ஜி/4ஜி சேவை மொபைல் இணைப்பைக் கொண்டுள்ளன. இதன் மூலம் நாட்டில் 95.15 சதவீத கிராமங்கள் இணைய வசதியைப் பெற்று உள்ளன.

மார்ச் 2014 நிலவரப்படி நாட்டில் மொத்த இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 25.19 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை மார்ச் 2024-ல் 95.44 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஆண்டுக்கு இணைய சந்தாதாரர் எண்ணிக்கை 14.26 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in