பங்குச் சந்தையின் போக்கை மத்திய பட்ஜெட் தீர்மானிக்கும்: நிபுணர்கள் தகவல்

பங்குச் சந்தையின் போக்கை மத்திய பட்ஜெட் தீர்மானிக்கும்: நிபுணர்கள் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: நாளை மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட இருக்கிறது. பங்குச் சந்தையின் அடுத்தகட்டப் போக்கை தீர்மானிக்கும் காரணியாக பட்ஜெட் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஜூன் மாதத்தில் புதிய அரசு ஆட்சியமைத்த பிறகு, இந்தியப் பங்குச் சந்தை உச்சம் தொடர ஆரம்பித்தது. கடந்த மே மாதத்தில் 75,000 ஆக இருந்த சென்செக்ஸ் தற்போது 80,604 ஆக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டுக்கான முழுபட்ஜெட்டை நாளை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், பட்ஜெட்டில் இடம்பெறும் அறிவிப்புகள் பங்குச் சந்தையின் அடுத்தகட்டப் போக்கை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், வரும் நாட்களில் பஜாஜ் பைனான்ஸ், இந்துஸ்தான் யுனிலிவர், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் பின்சர்வ், எல் அண்ட் டி, டிஎல்எஃப், டெக் மஹிந்திரா, நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் முதல் காலாண்டு நிதி அறிக்கையை வெளியிட உள்ளன.

இதுவும் பங்குச் சந்தைப் போக்கில் தாக்கம் செலுத்தும் என்று ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் வினோத் நாயர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவின்படி சென்செக்ஸ் 80,604 ஆகவும், நிஃப்டி 24,530 ஆகவும் உள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in