Published : 22 May 2018 08:48 AM
Last Updated : 22 May 2018 08:48 AM

7. 2 கோடி பேருக்கே வங்கிகள் கடன் அளிக்கின்றன: சிபில் அறிக்கையில் தகவல்

சில்லறை கடன் வழங்கும் முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தாலும் கடன் பெற தகுதியுள்ள 22 கோடிப் பேரில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்குவதாக சிபில் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடன் பெற தகுதியுள்ள 15 கோடிப் பேருக்கு வங்கிகள் கடன் அளிக்காமல் தவறவிடுவதாகவும், வெறும் 7.2 கோடிப் பேருக்கு மட்டுமே கடன் அளிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

சரியான வயது, வருமானம் போன்ற கடன் பெறும் தகுதிகள் இருந்தும் வங்கிகளால் தவறவிடப்பட்டுள்ள 15 கோடிப் பேரில் கடந்த காலங்களில் கடன் பெற்று, இப்பொழுது கடன் எதுவும் பெறாதவர்களும் உள்ளனர் என சிபில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் அட்டைகள், தனிநபர் கடன்கள் மூலம் தவறவிடப்பட்டுள்ளவர்களை கடன் அளிக்கும் நிறுவனங்கள் கவர முடியும், இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்றும் சிபில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிபில் அமைப்பின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பிரிவு துணைத் தலைவர் யோகேந்திர சிங், தவறவிடப்பட்டுள்ளவர்களுக்கு கடன் அளிப்பதன் மூலம் வங்கி போன்ற கடன் அளிக்கும் நிறுவனங்களுக்கு நிலையான வளர்ச்சி ஏற்படும் என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: தவறவிடப்பட்டுள்ளவர்களை சென்றடைவதற்கான வழிகளை கடன் அளிக்கும் நிறுவனங்கள் கண்டறிய வேண்டும்.தேவையான வயது மற்றும் வருமானத்தை இன்னும் அதிகம் பேர் எட்டும்போது வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்காக கடன் பெறுவது இன்னும் அதிகரிக்கும். டிஜிட்டல் சந்தை வளர்ந்துவரும் நிலையில் கடன் அட்டைகளின் தேவை அதிகரிக்கும் என யோகேந்திர சிங் கூறினார்.

20 முதல் 69 வரை வயதுள்ளவர்களில் வருட வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களான 22 கோடிப் பேர் கடன் பெறத் தகுதியானவர்கள் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 1.4 - 1.6 கோடி என்ற விகிதத்தில் அதிகரித்து 2022-ம் ஆண்டில் 29.5 கோடியாக இருக்கும் என சிபில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளின் வளர்ச்சிப் பாதையை இந்தியா கடைபிடித்தால் 2022-ம் ஆண்டில் நாட்டிலுள்ள மொத்த குடும்பங்கள் பெற்றுள்ள கடன் குறைந்தபட்சமாக ரூ.78 லட்சம் கோடியாகவும், அதிகபட்சமாக ரூ.94 லட்சம் கோடியாகவும் உயரும் என சிபில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.37 லட்சம் கோடியாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x