Published : 06 May 2018 10:57 AM
Last Updated : 06 May 2018 10:57 AM

டெரிவேட்டிவ் நேர நீட்டிப்புக்கு `செபி’ ஒப்புதல்: காலை 9 முதல் இரவு 11.55 மணி வரை வர்த்தகத்துக்கு அனுமதி

டெரிவேட்டிவ் (பங்கு) வர்த்தகத்துக்கான நேரத்தை நீட்டிப்பதற்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. கூடுதலாக 8 மணிநேரம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தற்போது காலை 9 மணிமுதல் 3.30 மணி வரை மட்டுமே ரொக்கம் மற்றும் டெரிவேட்டிவ் வர்த்தகம் நடக்கிறது. ஆனால் இரவு 11.55 வரையிலான வர்த்தகத்துக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

கமாடிட்டி வர்த்தகத்துக்கு இணையாக நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக செபி அறிவித்திருக்கிறது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நேர நீட்டிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பங்குச்சந்தை அமைப்புகள் இதற்கான தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், பங்குச்சந்தை அமைப்புகள் தனியாக செபியின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செபியின் இந்த முடிவினை பிஎஸ்இ தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் குமார் சவுகான் வரவேற்றிருக்கிறார். மேலும் வர்த்தக நேரத்தை நீட்டித்ததன் மூலம் சர்வதேச சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைகளுக்கு ஏற்ப இந்திய சந்தைகள் செயல்படும். சர்வதேச அளவில் டெரிவேட்டிவ் சந்தைகள் அதிக நேரம் வர்த்தகமாகின்றன என்றார்.

என்எஸ்இ தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் லிமயேயும் செபியின் இந்த முடிவினை வரவேற்றிருக்கிறார். முதலீட்டாளர்களுக்கும் இது சாதகமான மாற்றமாகும். இரவு வரை வர்த்தகமாவதால் சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப ஹெட்ஜ் செய்ய முடியும். தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இருந்த வசதி தற்போது உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் கிடைத்திருக்கிறது. மேலும் இதன் மூலம் வர்த்தகத்தின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று லிமயே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x