

கோவை: கோவை மாவட்டத்தில் உற்பத்தித் துறையின்கீழ் செயல்படும் நிறுவனங்களில் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகம் காணப்படுவதாகவும் இதனால் பொருட்கள் உற்பத்தி பணிகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் தொழில்துறையினர் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தனியார் நிறுவனம் சார்பில் கோவையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து ‘டைட்டான்’ நிறுவனத்தின் தலைமை நிலைத்தன்மை அதிகாரி ஸ்ரீதர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறியதாவது: எங்கள் நிறுவனம் சார்பில் சென்னை கிண்டியில் தொழிலாளர் திறன் மேம்பாட்டு மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்து பொறியியல் துறை உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ள கோவையில் திறன் மேம்பாட்டு மையம் ஜூலை 24-ம் தேதி முதல் செயல்பட உள்ளது.
பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான துறையில் திறமையான தொழிலாளர்களை பணியமர்த்த உதவும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சமுதாயத்தில் பின்தங்கிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதுடன் வேலைவாய்ப்பு பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல் ஆண்டு 600 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.
இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) முன்னாள் தலைவர் ரவிசாம் கூறும்போது, ‘‘உற்பத்தித்துறை சார்ந்த தொழில் நிறுவனங்களில் அடிப்படைப் பணிகளுக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தனியார் நிறுவனம் சார்பில் பொறியியல் உற்பத்தித் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கது’’ என்றார்.