

சென்னை: கடந்த ஆண்டு பதிவுத் துறை வருவாய் முந்தைய ஆண்டைவிட 8.84 சதவீதம் அதிகமாக அதாவது ரூ.18,825.32 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சார்பதிவாளர் அலுவலகங்களில் விற்பனை, பரிவர்த்தனை, தானம், அடமானம் மற்றும் குத்தகை ஆவணங்களை பதிவு செய்வதற்காக முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றுடன் ஆவணத்தில் பிரதிபலிக்கும் மதிப்புகளின் அடிப்படையில் குறிப்பிட்ட விகிதத்தில் மாற்று வரியும் வசூலிக்கப்படுகிறது.
மேலும் இந்து திருமணங்கள், சிறப்பு திருமணங்கள், சீட்டுக்கள் கூட்டாண்மை நிறுமங்கள் மற்றும்சங்கப்பதிவு, வில்லங்க சான்று,சான்றளிக்கப்பட்ட ஆவண நகல்கள், பிறப்பு, இறப்பு பதிவுகளின் அறிக்கை வழங்குவதன் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 22,857 ஆகும். இதன் மூலம் ரூ.18,825.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த 2020-21-ம் நிதியாண்டில் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை 26.35 லட்சமாக இருந்த நிலையில்,கடந்தாண்டு 33.22 லட்சமாக அதிகரித்துள்ளது. 2021-ம் நிதியாண்டில் ரூ.10,643 கோடியாக இருந்த வருவாய், ரூ.18,825 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்தாண்டு வருவாயானது முந்தைய 2022-23-ம் ஆண்டு வருவாயை காட்டிலும் 8.84 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.