Published : 11 May 2018 08:38 AM
Last Updated : 11 May 2018 08:38 AM
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 50 புதிய விற்பனையகங்களைத் திறக்கப் போவதாக வால்மார்ட் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் 77 சதவீத பங்குகளை வாங்கிய அடுத்த நாளே மொத்த விற்பனையகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்நிறுவனம் 9 மாநிலங்களில் 19 நகரங்களில் மொத்தம் 21 விற்பனையகங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு புதிதாக 5 விற்பனையகங்களைத்தொடங்க இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு 12 முதல் 15 விற்பனையகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக வால்மார்ட் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி கிரிஷ் ஐயர் தெரிவித்தார்.
பிளிப்கார்ட்டை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா வந்துள்ள நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக் மாக்மில்லன் பேசுகையில், பிளிப்கார்ட் தனி நிறுவனமாக, அதன் நிறுவனரான பின்னி பன்சாலை தலைமைச் செயல் அதிகாரியாக கொண்டு தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தியாவில் சில்லரை வர்த்தக விற்பனையில் வால்மார்ட் ஈடுபட முடியாத அளவுக்கு விதிமுறைகள் உள்ளன. தற்போது பிளிப்கார்ட்டை வாங்கியதன் மூலம் இந்த முட்டுக்கட்டையும் வால்மார்ட் நிறுவனத்துக்கு விலகியுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் 100 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட விதிமுறைகள் அனுமதிக்கின்றன.
-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT