Published : 10 May 2024 04:45 AM
Last Updated : 10 May 2024 04:45 AM

கோரிக்கைகளை பரிசீலிக்க நிர்வாகம் ஒப்புதல் - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

ஊழியர்களின் போராட்டத்தால் மும்பை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமானங்கள். படம்: பிடிஐ

புதுடெல்லி: டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் பணியாளர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 300 பேர் உடல்நிலை சரியில்லை எனக்கூறி மொத்தமாக விடுப்பு எடுத்தனர். மேலும், நிறுவனம் தொடர்புகொள்ள முடியாதபடி அவர்கள் தங்களது செல்போன்களையும் அணைத்துவைத்தனர்.

இதனால், 85 விமானங்களின் சேவைகளை ரத்து செய்யும் நிலைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தள்ளப்பட்டது. இந்த விமானப் பயணத்தை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில், திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கடும் நடவடிக்கை எடுத்தது. சுமார் 25 பணியாளர்களை பணிநீக்கம் செய்து அந்த நிறுவனம் உத்தரவிட்டது. ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் நேற்று மாலை 4மணிக்குள் பணியில் சேர வேண்டும் எனவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் சார்பில் கெடு விதிக்கப்பட்டது.

இதனிடையே அனைத்து பணியாளர்கள் அடங்கிய கூட்டுக் கூட்டத்துக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் அழைப்பு விடுத்தது. நிர்வாகத்துக்கும்- பணியாளர்கள் குழுவுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

ஊழியர்களின் கோரிக்கைகளான பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வு எட்டப்படும் என்று நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், 25 ஊழியர்களின் பணிநீக்க உத்தரவையும் திரும்பப்பெற்று மீண்டும் பணியில் அமர்த்தவும் அந்நிறுவனத்தின் சார்பில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சுமுகமான பேச்சுவார்தையை அடுத்து ஊழியர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்தன. செவ்வாய்க்கிழமை இரவு முதல் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டு பயணிகள் அவதியடைந்து வந்த நிலையில், இரண்டரை நாட்களுக்குப் பிறகு அவர்களின் துன்பத்துக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x