Published : 10 May 2024 05:05 AM
Last Updated : 10 May 2024 05:05 AM

இன்று அட்சய திருதியை | தங்கம் வாங்குவோருக்கு ஏராளமான சலுகை: காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை விற்பனை

சென்னை: அட்சய திருதியை தினத்தையொட்டி, தங்க நகை முன்பதிவு 30% அதிகரித்துள்ளது. நகை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டில் இன்று (மே 10) அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கிநாளை (மே 11) அதிகாலை 2.50 மணி வரை அட்சய திருதியை உள்ளது. இதையொட்டி, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகவே நகைக் கடைகளில் தங்க நகைகளுக்கான முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. மக்களை கவரும் விதமாக, சேதாரத்தில் குறிப்பிட்ட சதவீதம் குறைவு, பவுனுக்கு ரூ.1,000 முதல் தள்ளுபடி என பல்வேறு சலுகைகளை நகைக் கடை உரிமையாளர்கள் போட்டி போட்டு அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: தமிழகத்தில் சிறிதும், பெரிதுமாக 35,000-க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளன. இதில், சென்னையில் மட்டும் 7,000-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. அட்சய திருதியை தினத்தையொட்டி, இன்று காலை 6 மணிக்கே கடைகளை திறக்க ஏற்பாடு செய்துள்ளோம். நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும். வெகு தூரத்தில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல வாகன வசதி செய்துள்ளோம், அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டைவிட தற்போது முன்பதிவு 20-30 சதவீதம் அதிகரித்துள்ளது. எடை குறைவான நெக்லஸ், ஃபேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் போன்றவற்றில் புதிய மாடல்கள் வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, கடந்த ஒரு மாதமாக தங்கம் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் பவுன் விலை ரூ.2,500 வரை குறைந்துள்ளது. இதனால், மக்கள் தங்கம் வாங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்றார்.

22 காரட் தங்கம் நேற்று கிராமுக்கு ரூ.15 என பவுனுக்கு ரூ.120 குறைந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.6,615-க்கும், ஒரு பவுன் ரூ.52,920-க்கும் விற்பனையானது.

24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7,085, ஒரு பவுன் ரூ.56,680 என்ற அளவில் இருந்தது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.88.70, ஒரு கிலோ பார் ரூ.88,700 ஆக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x