Published : 09 May 2024 04:10 AM
Last Updated : 09 May 2024 04:10 AM

‘இ-பாஸ் நடைமுறையால் நீலகிரியில் சுற்றுலாவை நம்பியுள்ள தொழில்கள் கடும் பாதிப்பு’

பிரதிநிதித்துவப் படம்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை நம்பியுள்ள தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உதகை காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இது குறித்து காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் மகேந்திரன் கூறியதாவது: இ-பாஸ் நடைமுறை குறித்து தமிழகம் மற்றும் கேரளா உட்பட பல்வேறு மாநில மக்களுக்கு சரிவர தெரியவில்லை. ஒரு சில நேரங்களில் இ-பாஸ் இல்லாமல் வந்து நீண்ட நேரம் சோதனைச் சாவடியில் காத்திருந்து, பின் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதனால், கோடை சீசனை முன்னிட்டு ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த தங்கும் விடுதிகளை பயணிகள் ரத்து செய்து வருகின்றனர்.

இதனால் 80 சதவீத காட்டேஜ்கள் காலியாக உள்ளன. இ-பாஸ் நடைமுறையால் காட்டேஜ் தொழில் உட்பட அனைத்து சுற்றுலா தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல், மே ஆகிய கோடை சீசனில் மட்டும்தான் ஓராண்டுக்கு தேவையான முழு வியாபாரமும் நீலகிரியில் நடைபெறும். இ-பாஸ் நடைமுறையால் உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இ-பாஸ் நடைமுறையை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் காட்டேஜ்கள் மூடப்படும். சுற்றுலாவை நம்பியுள்ள பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த நேரிடும், என்றார். அப்போது உதகை காட்டேஜ் அசோசியேஷன் தலைவர் பிரபு, பொருளாளர் இலியாஸ், துணைச் செயலாளர் சுதாகர், துணைத் தலைவர்கள் பாபு, கார்த்தி உட்பட பலர் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x