Published : 08 May 2024 04:02 AM
Last Updated : 08 May 2024 04:02 AM

பணியாளர்களுக்கு மோர் வழங்க தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

திருப்பூர்: வெப்ப அலையை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தங்களது கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, வெப்ப அலை தணிப்பு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதன்படி, தங்களது நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இருவருக்கும் போதுமான காற்றோட்ட வசதிகள் மற்றும் சுத்தமான கழிவறை, குளியல் அறை வசதிகள் செய்து தர வேண்டும். பணியாளர்கள் தங்குமிடம், சரியான இருக்கை வசதி, சுழற்சி முறையில் பணியாளர்களுக்கு ஓய்வு, சட்டப்பூர்வமான வேலை நேரம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். பணியாளர்கள் மற்றும் மக்கள் அருந்த சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

அதிக வெப்பமான நாட்களில் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு எலுமிச்சை சாறு, மோர் கிடைக்குமாறு செய்ய வேண்டும். மேலும் அவசர சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் வசதி போன்ற மருத்துவத் தேவைக்காக அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் தயார் நிலை ஏற்பாடுகள் செய்திருத்தல் வேண்டும்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் வெப்ப தாக்கம் அதிகமுள்ள பகுதிகளான உணவு நிறுவனங்கள், பேக்கரிகள், கிடங்குகள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நீர்மோர் வழங்குதல், குளிர் பானங்கள் வழங்குதல், பணியாளர்களுக்கு ஓய்வு நேர இடைவெளி வழங்குதல் போன்ற வெப்ப தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வெப்ப அலை வீசுவதை எதிர்கொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் வணிகர் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வெப்ப அலையை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வெப்ப அலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து தொழிலாளர் துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்வர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x