Published : 08 May 2024 06:15 AM
Last Updated : 08 May 2024 06:15 AM

வங்கிகளில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு சர்ஃபாசி சட்ட நடவடிக்கையில் விலக்கு அளிக்க கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்சாதனங்கள், வாகன உதிரி பாகங்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. இந்நிறுவனங்கள் நடைமுறை மூலதன செலவை சமாளிக்கவும், விரிவாக்கத் திட்டங்களுக்கும் வேண்டி வங்கிகளில் கடன் பெறுகின்றன.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட சேவைகளை பெறும் பெரியநிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் குறித்த காலத்துக்குள் பணம் தருவதில்லை. இத்தகைய காரணங்களால் பல தொழில் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.

தொடர்ந்து 3 மாதங்கள் அசல் மற்றும்வட்டியை செலுத்தத் தவறினால் சர்பாசி சட்டத்தின் கீழ், கடன்தாரர்களின் சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபடுகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு சிறு மற்றும்குறுந் தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் மோகன் கூறியதாவது: கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பல தொழில் நிறுவனங்கள் பாதிப்படைந்தன. இதனால், பல நிறுவனங்களுக்கு வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் 3 மாத கடன், அசல்தவணையை செலுத்தவில்லை எனில் வங்கிகள் சர்ஃபாசி சட்டத்தின் கீழ் சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கையை எடுக்கின்றன. இந்த நடவடிக்கையால் தொழில் நிறுவனங்கள் முடக்கப்படுகின்றன. இதனால் தொடர்ந்து கடனை கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு சர்ஃபாசி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், நடவடிக்கை எடுக்கும் காலத்தை 3 மாதங்களுக்குப் பதில் 6 மாதங்களாக மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x