Last Updated : 06 May, 2024 04:08 AM

 

Published : 06 May 2024 04:08 AM
Last Updated : 06 May 2024 04:08 AM

”தமிழக அரசு டெண்டர் வெளியிட்டால் புதிதாக 5,000 மெகாவாட் சூரிய ஆற்றல் மின் உற்பத்திக்கு முதலீடுகள் கிடைக்கும்”

கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி கட்டமைப்பு. படம்: ஜெ.மனோகரன்

கோவை: சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் முதலீடுகள் அதிகரிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை அமல்படுத்தி, அரசு டெண்டர் வெளியிட்டால் சூரிய ஒளி ஆற்றல் திட்டத்தில் புதிதாக 5,000 மொகாவாட் வரை மின்உற்பத்திக்கு முதலீடுகள் செய்ய தொழில்துறையினர் தயாராக உள்ளதாக மின்உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை போன்ற மின் உற்பத்தி திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் சூரிய ஒளி திட்டத்தில் 6 ஆயிரம் மெகா வாட், காற்றாலை மின் உற்பத்தியில் 8,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்காக கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆண்டுதோறும் கோடை காலத்தில் தினசரி மின் நகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கேற்ப மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களில் முதலீடுகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன், தமிழ்நாடு சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறியதாவது: சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திட்டங்கள் அனைத்தும் இயற்கை மனிதர்களுக்கு அளித்த பொக்கிஷமாகவே கருதப்படுகின்றன.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இது போன்ற திட்டங்களை சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் இவ்வாண்டு தினசரி மின் தேவை 21 ஆயிரம் மெகா வாட்டை நெருங்கி வரும் நிலையில் கோடை காலம் முடியும் முன் 22 ஆயிரம் மெகமா வாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் கோடை காலத்தில் தினசரி மின்தேவை 25 ஆயிரம் மெகா வாட்டாக உயரும் என நம்பப்படுகிறது.

இதற்கேற்ப மின்உற்பத்தி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிக அவசியம். தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழக அரசு கொள்முதல் செய்ய ‘மின் கொள்முதல் ஒப்பந்தத்தை’ உடனடியாக ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு டெண்டர் வெளியிட்டால் புதிதாக முதலீடுகள் செய்ய தனியார் தொழில்துறையினர் பலர் முன்வருவார்கள்.

அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டால் சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியில் மட்டும் புதிதாக 5,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்வதற்கான முதலீடுகள் செய்ய தனியார் உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர். எதிர்வரும் ஆண்டுகளில் கோடை கால தினசரி மின் நுகர்வை எதிர்கொள்ள தமிழக அரசு தற்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அடுத்த ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரிக்கும் மின் தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x