Published : 08 Apr 2018 09:26 AM
Last Updated : 08 Apr 2018 09:26 AM

சிறிய நகரங்களில் தொழில் வளர்ச்சி: தென் மண்டல சிஐஐ ஆலோசனை

தென் மாநிலங்களின் சிறிய நகரங்களில் தொழில் முன்னேற்றத்திற்காக மாநில அரசுகளுடன் சிஐஐ இணைந்து செயல்படும். மேலும் தென்னிந்தியாவில் வலுவான தொழில் சூழலை உருவாக்குவதற்கான குறிக்கோள் மற்றும் அக்கறையுள்ள மாநில அரசுகளுடனும் சிஐஐ நெருக்கமாக பணியாற்றும் என்று சிஐஐ அமைப்பின் தென் மண்டலத் தலைவர் ஆர். தினேஷ் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தென் மாநிலங்களில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் வளர்ச்சியில் சிஐஐ அக்கறை செலுத்துகிறது. குறிப்பாக `போட்டித்திறன் மிக்க, துடிப்பான தென்னிந்தியா` என்கிற முழக்கத்தின் அடிப்படையில் 2018-19 ஆண்டில் செயல்படுவதற்கான இலக்கினைக் கொண்டுள்ளோம். இதன்படி தென்னிந்திய அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகள், பெண்களுக்கான சம வாய்ப்பு, நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளோம். தென்னிந்திய மாநிலங்களில் வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்துறை திட்டங்களில் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவோம்.

தென் இந்திய அளவில் உள்ள உறுப்பினர்களை அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வைத்தல், அவர்களுக்கான உலகளாவிய வலைபின்னல் உருவாக்குதல், சமூக மற்றும் சூழலியல் நோக்கங்களுக்கு ஏற்ப செயல்படவும் சிஐஐ தென் பிராந்தியம் அக்கறை செலுத்தி வருகிறது. இதற்கேற்ப அவர்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. பாதுகாப்புத்துறை உற்பத்தி, மின்னணு துறை வளர்ச்சி, உணவு தானிய உற்பத்தி, ஆயூர்வேத தயாரிப்புகள், உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து போன்ற துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இவற்றை எம்எஸ்எம்இ துறையினர் கவனம் செலுத்துவதற்கு ஏற்ப சிஐஐ நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என்றும் தினேஷ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x