Published : 18 Apr 2018 08:37 AM
Last Updated : 18 Apr 2018 08:37 AM

வங்கிகளின் வாராக்கடன் அளவு: ரூ.2,000 கோடி உச்ச வரம்பை ரூ.100 கோடியாகக் குறைக்க முடிவு

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு வங்கிகளின் வாராக்கடன் அளவை ரூ. 100 கோடியாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இப்போது திரும்பாக் கடன் அளவு ரூ 2 ஆயிரம் கோடியாக உள்ளது. வாராக்கடன் அளவை இரண்டு ஆண்டு காலத்திற்குள் படிப்படியாகக் குறைப்பது என முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினை மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த நிதி மோசடி, ஐசிஐசிஐ வங்கி விவகாரம் ஆகியன குறித்து எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தி வருகின்றன. இதனால் வாராக்கடன் அளவை ரூ. 100 கோடியாகக் குறைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை கடுமையாக்கியது. இதன்படி வங்கிகள் மேற்கொள்ளும் கடன் சீரமைப்பு திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதன்படி ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேலான கடன்களை வாராக்கடன் (என்பிஏ) பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. அத்துடன் 180 நாள்களுக்குள் இந்தக் கடன்கள் மீது திவால் மசோதா நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

மறு சீரமைப்பு கடன் மற்றும் வாராக்கடன் ஆகியவற்றில் இதன் மூலம் மிகப்பெரிய மாறுதலை ஆர்பிஐ கொண்டு வந்தது. வங்கிகள் தற்போது 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் சொத்துகளை நிர்வகிக்கின்றன. இதில் வாராக்கடன் அளவு மட்டும் 7.7 லட்சம் கோடியாகும். மற்றவை மறு சீரமைப்பு கடனாகும்.

வாராக் கடன் அளவு வரம்பை குறைக்கும் நடவடிக்கை குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று தெரிகிறது. இது நடைமுறைக்கு வந்தால் திவால் மசோதா நடைமுறையில் மேலும் பல நிறுவனங்கள் இடம்பெறும். இதன் மூலம் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விவகாரத்தில் நடைபெற்றதைப் போல வங்கிகளே கடன் செலுத்தாத நிறுவனங்களின் சொத்துகளை கைப்பற்ற முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மார்ச் 2015 முதல் ஜூன் 2017 வரையான காலத்தில் வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ. 4,54,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே அரசும், ரிசர்வ் வங்கியும் மாற்று யோசனைகளை செயல்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x