

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 29) தங்கத்தின் பவுனுக்கு ரூ.1120 உயர்ந்து ரூ.51,120 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தங்கத்தின் விலை அன்றாடம் அதிகரித்திருப்பது நகை வாங்குவோரை, குறிப்பாக சாமான்ய மக்களை கவலையடையச் செய்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித் ததங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.
இதைத் தொடர்ந்து நடப்பாண்டில் தொடர்ச்சியாக தங்கம் விலைஉயர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று பவுனுக்கு ரூ.1120 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.51,120 என்னும் அடுத்த புதிய உச்சத்தை அடைந்தது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.80,800-க்கும் விற்பனையானது.