Published : 07 Feb 2018 11:07 AM
Last Updated : 07 Feb 2018 11:07 AM

கடும் சரிவில் இருந்து மீளும் பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தைகள், பட்ஜெட் தாக்கலான நாள் முதல் கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில் இன்று வீழ்ச்சியில் இருந்து மீளத் தொடங்கியுள்ளன. இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 470 புள்ளிகள் உயர்வு கண்டது.

பங்குச்சந்தைகளில் நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத முதலீட்டு ஆதாய வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு காரணமாக பட்ஜெட் தாக்கலான பிப்ரவரி 1ம் தேதி முதல் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2.72 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று பங்குச்சந்தைகள் கடும் சரிவில் இருந்து மீளத் தொடங்கியுள்ளன. இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 470 புள்ளிகள் உயர்ந்து, 34,666 புள்ளிகளாக வர்த்தகமாகின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 115.75 புள்ளிகள் உயர்ந்து, 10,614 புள்ளிகளாக உயர்ந்தன.

டாடா ஸ்டீல், டாடா மோட்டர்ஸ், ஓஎன்ஜிசி, இண்டஸ்இந்த் வங்கி, மாருதி சுசூகி, எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், அதானி போட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, கோடக் வங்கி ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டன. உலோகம், நுகர்வோர் துறை சார்ந்த பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x