Published : 07 Apr 2014 12:00 AM
Last Updated : 07 Apr 2014 12:00 AM

தொழிலை எவ்வகையில் ஆரம்பிக்கலாம்?

தொழில் தொடங்குவதற்கான நிதி திட்டமிடல் குறித்து சென்ற வாரம் பார்த்தோம். நீங்கள் தொழிலில் இறங்குவது என்று முடிவாகிவிட்டது. இனி அத்தொழிலை எவ்விதத்தில் அல்லது எந்த வகையில் ஆரம்பிக்க வேண்டும் என்பது முக்கியம். பொதுவாக தொழில்களை ஒருவர் கீழ்க்காணும் வகைகளில் ஆரம்பிக்கலாம்.

1.உரிமையாளர் (Sole Proprietorship)

2.கூட்டுத் தொழில் (Partnership)

3.எல்.எல்.பி (LLP - Limited Liability Partnership)

4.பிரைவேட் லிமிடெட் கம்பெனி (Private Limited Company)

5.பப்ளிக் லிமிடெட் கம்பெனி (Public Limited Company)

முதன் முதலாக சிறிய தொழில் தொடங்குபவர்கள் புரபரைட்டர் அடிப்படை யில் தொடங்கலாம். தொழில் தொடங்குவதற்கு இருப்பதிலேயே மிகவும் எளிதான வகை இதுதான்.

நாம் தொழில் தொடங்குவதற்கு மூலதனமோ அல்லது அறிவோ தேவைப்படும்போது பார்ட்னர்ஷிப் அடிப்படையில் தொடங்குவது சிறந்தது. தாம் ஆரம்பிக்கும் தொழிலில் தனது கடன் பொறுப்பு (Liability) ஒரு அளவிற்குள் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எல்.எல்.பி அடிப்படையில் தொழிலை ஆரம்பிக்கலாம்.

தாங்கள் ஆரம்பிக்கப் போகும் தொழில் பெரிய மூலதனத்துடன் பெரிய செயல்பாட்டுடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பிரைவேட் லிமிடெட் அல்லது பப்ளிக் லிமிடெட் அடிப்படையில் தொழிலைத் தொடங்கலாம்.

உரிமையாளர் (SOLE PROPRIETORSHIP)

நாம் மேலே கண்ட ஐந்து வகைகளில் இவ்வகைதான் தொழில் ஆரம்பிப்பதற்கு மிகமிகச் சுலபமானது.

ஆகவே ஆரம்பத்தில் தொழில் செய்ய முனைபவர்கள் இவ்வகையில் தங்களது தொழிலை தொடங்கலாம். தொழில் பெரிதாகும் பொழுது பிற வகைகளுக்கு மாறிக்கொள்ளலாம்.

இவ்வகை தொழிலை தொடங்குவதற்கு உங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கே போதுமானது.

தொழிலுக்கு/நிறுவனத்துக்கு நீங்கள் ஒரு பெயரை சூட்டி இருந்தால், அந்தப் பெயரிலேயே நீங்கள் வங்கிக் கணக்கை திறந்து கொள்ளலாம்.

நீங்கள் உங்களின் தொழிலுக்கு ஆதாரமாக தமிழ்நாடு அரசாங்கத்திடமிருந்து சிறு தொழில் சான்றிதழை (SSI Certificate – Small Scale Industry Certificate) பெற்றுக் கொள்ளலாம். இது தவிர ஒரு அஃபிடவிட் (Affidavit) செய்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் உங்கள் நிறுவனத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த இரண்டும் உங்களுக்கு பல இடங்களில் உதவியாக இருக்கும். இவை தவிர நீங்கள் செய்ய போகும் தொழிலுக்கு ஏற்ப பிற லைசென்ஸுகளையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு நீங்கள் சேவைத் தொழிலில் ஈடுபட்டிருந்தால் சேவை வரி பதிவு எண் (Service Tax Registration Number) அவசியம். அதைப்போல் உணவகம் நடத்தினால், அதற்கென்று மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். நீங்கள் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருந்தால் வேட், சி.எஸ்.டி (VAT – Value Added Tax; CST – Central Sales Tax) போன்ற லைசென்ஸுகளைப் பெற வேண்டும்.

இவ்வகையான தொழில் முறையில் பெரிய அசௌகரியம் என்னவென்றால், தொழிலில் ஏற்படும் நஷ்டங்களுக்கு உங்கள் சொந்த சொத்துகளை தரக்கூறி உங்கள் எதிர்தரப்பு உரிமை கோரலாம். வருமான வரியைப் பொறுத்தவரை தொழில் வருமானம் மற்றும் உங்கள் வருமானம் ஆகிய இரண்டும் ஒன்றே. ஆகவே ஒரே வருமான வரி தாக்கல் செய்தால் போதுமானது.

முதல் தலைமுறை தொழில் அதிபர்களுக்கு இத்தொழில் அமைப்பு சாதகமாக அமையும். ஏனென்றால் முடிவு எடுப்பதும் செயல்படுத்துவதும் ஒருவரே. வேறு ஒருவரின் அனுமதிக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. நீங்கள் நினைத்த வேகத்தில் தொழில் சிறக்கும்.

இதன் மறுபக்கம் என்று பார்த்தால், உங்களின் வேகமான முடிவுகளினால் சில தவறுகளும் ஏற்படலாம். இன்று பிரமாண்ட நிறுவனங்களாக தலை நிமிர்ந்து நிற்கும் பல நிறுவனங்கள் உரிம அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்கள்தான். ஆகவே உங்கள் ஐடியா எதுவாக இருந்தாலும் இவ்வகையில் முதலில் முயற்சி செய்யுங்கள் தோழர்களே!

பார்ட்னர்ஷிப் அடிப்படையில் தொழில் ஆரம்பிப்பது குறித்து வரும் வாரத்தில் பார்ப்போம்.

prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x