உலகின் 3-வது பெரிய புகையிலை நிறுவனம் ஐடிசி

உலகின் 3-வது பெரிய புகையிலை நிறுவனம் ஐடிசி
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஐடிசி நிறுவனம் 67 பில்லியன் டாலர்கள் சந்தை மூலதனத்துடன் உலகின் 3-வது பெரிய புகையிலை நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

ஐடிசி நிறுவனம் புகையிலைப் பொருட்கள் மட்டுமின்றி, நுகர் பொருட்கள், விருந்தோம்பல் உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சந்தைமூலதனம் வெகுவாக அதிகரித்ததையடுத்து ஐடிசி நிறுவனம் உலகின் 3-வது பெரிய புகையிலை நிறுவனமாக மாறியுள்ளது.

கடந்த வார வர்த்தகத்தில் லண்டனைச் சேர்ந்த சிகரெட் தயாரிப்பாளரான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ (பிஏடி) நிறுவனத்தின் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தது. இதையடுத்து, அதன் சந்தை மூலதனம் 64 பில்லியன் டாலருக்கும் கீழ் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.31 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்தது.

ரூ.5.6 லட்சம் கோடி: இதையடுத்து, ஐடிசி நிறுவனம் 67 பில்லியன் டாலர் அதாவது ரூ.5.6 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் மூன்றாவது இடத்தை பிடித்தது. அண்மைக் காலமாக புகையிலைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படுவது, சுகாதார அபாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது ஆகியவை பாரம்பரிய புகையிலை நிறுவனங்களின் வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. சில சந்தைகளில் சிகரெட் விற்பனை கணிசமாக சரிவைச் சந்தித்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய புகையிலை நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த பிலிப் மோரிஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஆல்ட்ரியா குழுமம் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in