Published : 04 Jan 2018 10:37 AM
Last Updated : 04 Jan 2018 10:37 AM
கடந்த ஆண்டு 132 சிறு மற்றும் நடுததர நிறுவனங்கள் 1,785 கோடி ரூபாய் நிதியை எஸ்எம்இ எக்ஸ்சேஞ்ச் மூலம் திரட்டின. முந்தைய 2016-ம் ஆண்டு எஸ்எம்இ பிரிவில் திரட்டிய தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும். 2016-ம் ஆண்டு 66 நிறுவனங்கள் ரூ.540 கோடியை திரட்டின. ஆனால் 2017-ம் ஆண்டு 132 நிறுவனங்கள் ரூ.1,785 கோடியை திரட்டி இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் கடந்த ஐந்தாண்டுகளில் எஸ்.எம்.இ பிரிவில் மொத்தமாக திரட்டிய தொகை ரூ.1,315 கோடி மட்டுமே. ஆனால் கடந்த ஆண்டு ஐந்தாண்டு தொகையை விட அதிக நிதி திரட்டப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு திரட்டிய 132 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.30,000 கோடியாகும். சராசரியாக ஒரு நிறுவனம் ரூ.13.42 கோடி நிதி திரட்டி இருக்கிறது. 2016-ம் ஆண்டில் திரட்டப்பட்ட சராசரி நிதி ரூ.8.18 கோடி. அதிகபட்சமாக ஜோடா ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.58.50 கோடி அளவுக்கு நிதி திரட்டியது. இதனை தொடர்ந்து யூரோ இந்தியா பிரெஷ் பூட்ஸ் நிறுவனம் ரூ.51.26 கோடியை திரட்டியது.
மாநில வாரியாக பார்க்கும் போது குஜராத்தை சேர்ந்த 51 நிறுவனங்கள் அதிகபட்சம் நிதி திரட்டி இருக்கின்றன. இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 39 நிறுவனங்கள் நிதி திரட்டி இருக்கின்றன. இதற்கடுத்து மத்திய பிரதேசம்(11), டெல்லி (8), ராஜஸ்தான் (6), தெலங்கானா (4), மேற்கு வங்கம் (3) தவிர ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து தலா இரு நிறுவனங்கள் நிதி திரட்டி இருக்கின்றன.
மீடியா, உற்பத்தி, டெக்ஸ்டைல், இன்ஜினீயரிங், நிதி, ரசாயனம், விவசாயம், உணவு பதப்படுத்துதல் மற்றும் கட்டுமானம் ஆகிய பல துறைகளை சேர்ந்த நிறுவனங்களும் நிதி திரட்டி இருக்கின்றன. பல முக்கியமான முதலீட்டாளர்களும் இந்த நிதி திரட்டலில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.இதன் மூலம் எஸ்.எம்.இ நிறுவனங்கள் பிரபலமாகி வருகின்றன என்று முதலீட்டாளர் ஒருவர் கூறினார்.
2017-ம் ஆண்டு பட்டியலிடப்பட்ட 132 நிறுவனங்களில் 39 நிறுவன பங்குகள் முதல் நாளில் 20 சதவீதம் உயர்ந்தன. ஐந்து நிறுவனங்களின் ஐபிஓ-வுக்கு 100 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய நிறுவனங்கள் எஸ்.எம்.இ பிரிவுக்காக எக்சேஞ்சை 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கின. இதுவரை 329 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT