Published : 04 Jan 2018 10:38 AM
Last Updated : 04 Jan 2018 10:38 AM
சீனாவிலிருந்து கட்டுமானம் மற்றும் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள்கள் மீது கூடுதலாக பொருள் குவிப்பு வரி (ஆன்டி டம்பிங்) விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சல்போனேடட் நாப்தலீன் பார்மல்டிஹைடு எனும் பொருள் மிகக் குறைந்த விலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டால் உள்நாட்டில் இத்தகைய ரசாயன பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். இதைக் கருத்தில் கொண்டு இந்த ரசாயனம் மீது பொருள் குவிப்பு வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்களை காப்பதே இந்த வரி விதிப்பின் நோக்கமாகும்.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பிரிவான டிஜிஏடி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் குறித்த ஆய்வை தொடர்ந்து மேற்கொள்கிறது. இதன்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட ரசாயனப் பொருள்களால் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படும் என அரசுக்கு பரிந்துரைத்தது.
இதன் அடிப்படையில் பொருள் குவிப்பு வரியை 5 ஆண்டுகளுக்கு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரிக்குமாறு டிஜிஏடி துறைக்கு ஹிம்மாத்ரி சிறப்பு ரசாயன தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்தது. இதன் அடிப்படையில் டிஜிஏடி ஆய்வு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்தது.
இறக்குமதி செய்யப்படும் பொருள்களால் உள்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் வர்த்தகத்தில் சமநிலை நிலவ இத்தகைய வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT