Last Updated : 20 Jan, 2018 03:45 PM

 

Published : 20 Jan 2018 03:45 PM
Last Updated : 20 Jan 2018 03:45 PM

வருமான வரி விலக்கு உயர்த்தப்படுமா? - பட்ஜெட் 2018 எதிர்பார்ப்புகள்

இந்த ஆண்டு பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரிக்கான ஆண்டு உச்ச வரம்பை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

வரும் 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார். வழக்கம்போலவே பட்ஜெட் எதிர்பார்ப்புகள் வெவ்வேறு விதமாக வந்து கொண்டு இருக்கின்றன. பண நீக்க மதிப்பு, ஜிஎஸ்டி என அடுத்தடுத்த பாதிப்புகளால், இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக வர்த்தகம் தேக்க நிலையில் உள்ளது.

வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுமட்டுமின்றி பொருளாதார சுழற்சியை வேகப்படுத்தும் விதமாக நடுத்தர வருமான பிரிவினருக்கு சாதகமான சில அறிவிப்புகள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின், தனிநபர் வருமான வரியை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பொருளாதார நிபுணர்கள் ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசு நியமித்துள்ள கமிட்டியும் ஆய்வு செய்து வருகிறது. எனினும் மத்திய அரசின் வருவாயில் கணிசமான இடத்தை பிடித்துள்ள வருமான வரி மூலம் கிடைக்கும் வருவாயை இழக்க மத்திய அரசு விரும்பவில்லை. அதேசமயம் கொஞ்சம் கொஞ்சமாக வரியை குறைத்து சில ஆண்டுகளில் அதனை நீக்க வாய்ப்பு இருக்கிறது.

அதன் முன்னோட்டமாக வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. குறிப்பாக தனிநபர் வருமான வரி விலக்கு தற்போது ரூ.2.50 லட்சம் என்கிற நிலையிலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ரூ.5 லட்சம் வரை உயரத்த வேண்டும் என்ற பரவலான கோரிக்கை ஏற்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது.

வரும் பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக நிலவி வரும் எதிர்பார்ப்புகள் குறித்து, அனைத்து இந்திய வரி செலுத்துவோர் சங்க தலைவரும், கணக்கு தணிக்கையாளருமான வி.முரளி கூறியதாவது:

‘‘மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வருமான வரி விகிதங்களில் மட்டும் தான் மாற்றங்களை செய்துள்ளது. வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், 2019ம் ஆண்டு தாக்கல் செய்யும் பட்ஜெட் முழு அளவிலான பட்ஜெட்டாக இருக்காது. எனவே தற்போதைய மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு அளவிலான பட்ஜெட் இதுதான்.

எனவே இந்த பட்ஜெட்டில் வருமான வரி விஷயத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஓவ்வொரு ஆண்டும் பட்ஜெட் சமயத்தில் வருமான வரி பற்றி பெரிய அளவில் பேசப்படுகிறது. குறிப்பாக வருமான வரியால் அதிகம் பாதிக்கப்படுவது மாத சம்பளம் பெறும், நடுத்தர வர்க்கத்தினரே.

விலைவாசி உயர்வால் ஏற்பட்டுள்ள பணவீக்க மதிப்புக்கு நிகராக வருமான வரி கணக்கிடப்பட வேண்டும். அதற்கு ஏற்ப வருமான வரி விலக்கையும் உயர்த்த வேண்டும். முதலீடுகளுக்கு கூட கேபிடள் கெயின் எனப்படும் வருவாய் விலக்கு அளிக்கப்படும் நிலையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு ஏற்றவகையில் வருமான வரி விலக்கும் நி்ர்ணயிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசு தற்போது பின்பற்றி வரும் கொள்கைகள் காரணமாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைக்கப்பட்டு விட்டன. இதனால், மூத்த குடிமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்துள்ள முதலீடுகளுக்கான வருவாய் கணிசமாக குறைந்துள்ளது.

அதேசமயம் அதிகரித்து வரும் விலைவாசி காரணமாக அதிகமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். மூத்த குடிமக்கள் மட்டுமின்றி வங்கி உள்ளிட்ட சிறு முதலீடு செய்துள்ளவர்களின் வருவாய் பாதிப்பட்டுள்ளதால் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும்.

இதுபோலவே வீட்டு வாடகை செலுத்துபவர்கள் வாடகை படியை விட, செலுத்தும் வாடகை அதிகமாக இருந்தால், வருவாயில் இருந்து விலக்கு பெறும் நடைமுறை உள்ளது. இதற்கான அதிகபட்ச வரம்பை 2 லட்சமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த வரம்பையும் அதிகரிக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் இஞைர்கள் தற்போது வேலையில் சேர்ந்தவுடன் வீட்டுக்கடன் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த கடன் வாங்கி, பல ஆண்டுகளாக வட்டியை செலுத்தி வரும் இவர்கள், அதற்கான பலனை பெற வேண்டும். எனவே வீட்டு வாடகைக்கான உச்ச வரம்பையும் கணிசமாக அதிகரிக்க வேண்டும்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x