Last Updated : 14 Jan, 2018 09:38 AM

 

Published : 14 Jan 2018 09:38 AM
Last Updated : 14 Jan 2018 09:38 AM

தனியார் லாக்கரில் ரூ.85 கோடி சட்டவிரோத பணம்: வருமான வரித்துறை பறிமுதல்

புதுடெல்லியில் தெற்கு விரிவாக்க பகுதியில் தனியார் லாக்கரில் இருந்து ரூ.85 கோடி மதிப்புக்கு பணம் மற்றும் தங்கம் போன்றவற்றை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது. இந்த பணம் சட்டவிரோத பரிமாற்றத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

நேற்று நடைபெற்ற சோதனையில் பெட்டகங்களில் இருந்து ரூ.23 கோடிக்கும் அதிக மதிப்பிலான தங்க நகைகள், தங்க கட்டிகள், வைரக் கற்கள் மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலனாய்வு துறை விசாரணை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வாரத்தில் மட்டும் புதுடெல்லியின் தெற்கு விரிவாக்க பகுதியில் தனியார் பாதுகாப்பு பெட்டகத்தின் பல்வேறு லாக்கர்களில் இருந்து ரூ.61 கோடி வரையிலான சொத்துகளை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது.

வருமான வரித்துறையினருக்கு ரகசியமாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள மொத்த சொத்துகளில் மதிப்பு 85.2 கோடியாகும். இதில் சுமாராக 8 கோடி ரூபாய் அளவுக்கு ரூ.2,000 ரூபாய் நோட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய வரித்துறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு மற்றும் பினாமி சட்டத்துக்கு எதிராக இந்த சட்டவிரோத பெட்டகங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற னர்.

கணக்கில் காட்டாத சொத்துகள் என்பதால் லாக்கரில் உள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் கூறினர். இந்த சொத்துகளின் உரிமையாளர்கள் இவற்றை வரிக்கு உட்படுத்தாமல் இந்த பெட்டகங்களில் மறைத்துள்ளனர் என்றும் கூறினர். வங்கி லாக்கர்களைப் போல இந்த தனியார் லாக்கர்களும் செயல்பட்டு வந்துள்ளன. இந்த பெட்டக வசதி சட்ட விரோதமானதும் சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x