

கோவை: கோவையில் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் கடந்த 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ் செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 9 குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மொத்தம் 104 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 8 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, அதிக அளவு நிறமிகள் சேர்க்கப்பட்ட 501.3 கிலோ உணவுப் பொருள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1.10 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக தமிழ் செல்வன் கூறும்போது, “அளவுக்கு அதிகமாக நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களிலிருந்து 7 உணவு மாதிரிகள் எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 45 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி உணவுப் பொருட்களை பார்சல் செய்த 7 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம், ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல் துறையுடன் இணைந்து, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதமாக ரூ.80 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. உணவு தரம் குறித்த புகார்களை 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ் - அப் எண்ணில் அளிக்கலாம். தகவல் தொிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்"என்றார்.